Friday, August 6, 2010

எஸ்பிஐ-யில் புதிதாக 5,000 முகவர்கள்

தனியார் துறையைச் சேர்ந்த எஸ்.பீ.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. சிறப்பான செயல்பாட்டை கண்டு வரும் இந்நிறுவனம் அதன் ஒருங்கிணைப்பு சேவையை விரிவுபடுத்தும் வகையில் இவ்வாண்டு கூடுதலாக 20-25 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. மேலும் புதிதாக 5,000 முகவர்களை பணியில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் முகவர்களின் எண்ணிக்கை தற்போதைய 70,000 -ல் இருந்து 75,000-ஆக அதிகரிக்கும் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான எம்.என். ராவ் தெரிவித்தார். எஸ்.பீ.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ.114 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 195 சதவீதம் அதிகமாகும். இதே காலாண்டுகளில் இந்நிறுவனத்தின் மொத்த பிரிமிய வருவாய் 9.5 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,707 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் புதிய பிரிமியம் வாயிலான வருவாய் ரூ.976 கோடியாகும். குழும காப்பீடு வாயிலான வர்த்தகம் சுணக்கம் கண்டதையடுத்து புதிய பிரிமிய வருவாய் வளர்ச்சி சற்று குறைந்துள்ளது. நிறுவனத்தின் செலவினம் இத்துறையில் ஈடுபட்டு வரும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளது. எனவே செலவினங்களை குறைக்க வேண்டிய அவசியமில்லை என ராவ் குறிப்பிட்டார். எஸ்.பீ.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,350 கோடியாக உள்ளது. இதில் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.1,000 கோடியாகும். இது தவிர லாபத்திலிருந்து ரூ.350 கோடி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே நிறுவனத்தின் நிகர மதிப்பு நல்ல அளவில் உள்ளதால் புதிதாக மூலதனம் இட வேண்டிய அவசியமில்லை என ராவ் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் உற்பத்தி 7 சதவீதம் உயர வாய்ப்பு

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.60 கோடி டன்னுக்கு அதிகமாக இருக்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது, 7 சதவீத வளர்ச்சியாக இருக்கும் என்றாலும், சென்ற நிதி ஆண்டுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை (3.80 கோடி டன்) விட குறைவானது. அடுத்த சில ஆண்டுகளுக்கு உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி சற்றே மந்தமடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2008-09-ஆம் நிதி ஆண்டில் உற்பத்தி 1.8 சதவீதம் குறைந்தது. சென்ற நிதி ஆண்டில் இது 0.5 சதவீதம் என்ற அளவில் மிக குறைவான வளர்ச்சி கண்டது. அவ்வாண்டில் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 3.37 கோடி டன்னாக இருந்தது. இதனையடுத்து 3.80 கோடி டன் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கு எட்டப்படவில்லை. கெய்ரன் நிறுவனத்தின் பார்மர் எண்ணெய் வயலில் (ராஜஸ்தான்) உற்பத்தி தாமதம் ஆனதே இதற்கு முக்கிய காரணமாகும். நடப்பு நிதி ஆண்டில் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகளை உள்ளடக்கிய சுரங்கத் துறை 8 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு ஏன்?

பருவ மழையும், காலாண்டு முடிவுகளும் சந்தைக்கு சாதகமாக இருக்கின்றன. ஆகவே, சந்தையும் முதலீட்டாளர்களை ஏமாற்றவில்லை. 18,000 என்ற தடையை தாண்டி சந்தை ஜோராக போய்க்கொண்டிருக்கிறது. திங்களன்று, 212 புள்ளிகளும், செவ்வாய், 34 புள்ளிகளும் கூடியிருந்தது. புதனன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை, 102 புள்ளிகள் கூடி, 18,217 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 28 புள்ளிகள் கூடி, 5,467 புள்ளிகளுடனும் முடிந்தது. வங்கிப் பங்குகள் சந்தை ஏறுவதற்கு பெரிய உறுதுணையாக இருந்தன. குறைந்து வரும் மியூச்சுவல் பண்டு



முதலீடுகள்: ஜூலையில் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடுகள் 11,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது. நிறைய முதலீட்டாளர்கள் பணம் எடுத்தது தான் காரணம். தற்போது எல்லா மியூச்சுவல் பண்டுகளிலும் சேர்த்து, 6,66,667 கோடி ரூபாய் உள்ளது. பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும் முதலீட்டாளர்கள் லாபம் பார்த்ததாலும் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு.

கூடிவரும் டிபாசிட் வட்டி விகிதங்கள்: வரும் வாரங்களில் டிபாசிட் வட்டி விகிதங்கள் கூடும், அது டிபாசிட்டர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்று கூறியிருந்தோம். அதன்படியே பல வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை கூட்டி உள்ளன. ஐந்தாண்டு டிபாசிட்டுக்கு தற்போது 8 சதவீதம் வரை கிடைக்கிறது. மூத்த குடிமகன்களுக்கு 0.5 சதவீதம் வட்டி கூடுதலாக கிடைக்கும். இன்னும் சிறிது கூடவும் வாய்ப்பு உண்டு. ரிசர்வ் வங்கியின் அடுத்த அறிவிப்புகளை வைத்து வட்டி விகிதங்கள் கூடலாம்.


காலாண்டு முடிவுகள்: என்.எம்.டி.சி., கெயில், ஹிண்டால்கோ ஆகிய கம்பெனிகள் நல்ல முடிவுகளை தந்துள்ளன. அதானி வாங்கிய ஆஸ்திரேலிய கம்பெனி: பல துறைகளில் இருந்து வரும் அதானி குழுமம் ஆஸ்திரேலியாவின் நிலக்கரி சுரங்கம் ஒன்றை, 12,600 கோடி ரூபாய்க்கு வாங்கவுள்ளது. அதானி பவர் நிறுவனத்திற்கு தொடர்ந்து எரிபொருள் கொடுக்க இந்த சுரங்கம் வழிசெய்யும்.


தங்கம் ஏன் சிறிது கூடியது? சீனாவில் வங்கிகள் தங்கம் இறக்குமதி, ஏற்றுமதி செய்ய உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற செய்தி வந்ததை அடுத்து தங்கம் விலை சிறிது கூட ஆரம்பித்தது. மேலும், இந்திய வணிகர்கள், தங்கம் விலை குறைந்துள்ளதால் வாங்கவும் ஆரம்பித்தனர். இது சந்தையில் தங்கத்தின் விலையை கூட்டியது.


டாலர் ரூபாய்: டாலருக்கு எதிரான ரூபாய் வலுப்பெற்று வருகிறது. 46 ரூபாய்க்கு அருகே வந்து விட்டது. மறுபடி ஏற்றுமதியாளர்களுக்கு கவலையளிக்கக் கூடிய தருணங்கள் தான். இப்படி மாறி மாறி மேலும் கீழும் இருப்பதால் ஏற்றுமதியாளர்களாலும் சரிவர கணிக்க இயலவில்லை.


ஏன் ரூபாய் வலு பெற்றது? இந்தியாவிற்குள் வெளிநாட்டுப் பணவரத்து அதிகமாக உள்ளது. இது சந்தையில் டாலரை வலுவிழக்க செய்கிறது. அதே சமயம் ஜூன் மாத ஏற்றுமதி கடந்தாண்டு ஜூன் மாத ஏற்றுமதியை விட, 30 சதவீதம் கூடுதலாக உள்ளது. இந்த ஜூனில் 17.74 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்துள்ளோம்.

புதிய வெளியீடுகள்: பஜாஜ் கம்பெனியின் ஒரு அங்கமான பஜாஜ் கார்ப் (அல்மாண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்) தங்களது புதிய வெளியீட்டை கொண்டு வந்துள்ளது. இன்று வரை இருக்கும். விலை ரூபாய் 630 முதல் 660 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் கம்பெனி என்பதால் சிறிது ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் போடலாம்.


இது தவிர இன்ஜினியர்ஸ் இந்தியா தனது வெளியீட்டின் விலையை ரூபாய் 290 என்றும், எஸ்.கே.எஸ்., மைக்ரோ பைனான்ஸ் தன் வெளியீட்டின் விலையை 985 ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளது. சிறிய முதலீட்டாளர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும். பட்டியலிடப்படும் போது இரண்டு கம்பெனிகளும் லாபத்தில் பட்டியலிடப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தை ஜம்மென 18,000த்தை தாண்டி விட்டது. இந்நிலையில் நிலைத்து நிற்க வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டுப் பணம் சந்தைக்குள் வருவதால் சந்தை பெரிய இறக்கங்களை சந்திக்க வாய்ப்பில்லை.

ஹுண்டாய் தொழிற்சாலையின் அபார வளர்ச்சி

''சென்னை தொழிற்சாலையில் 12 ஆண்டுகளில் 30 லட்சம் கார்கள் தயாரித்து சாதனை படைத்துள்ளோம்' என்று ஹுண்டாய் நிர்வாக இயக்குனர் பார்க் தெரிவித்தார்.



ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 30 லட்சமாவது கார் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. தொழிற்சாலை உற்பத்திப் பிரிவு துணைத் தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் அரவிந்த் சக்சேனா முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் எச். டபிள்யூ பார்க், 30 லட்சமாவது காரை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ஹுண்டாய் கார் தொழிற்சாலை 1996ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டு கட்டப்பட்டது. 1998ம் ஆண்டு சிறிய ரக சான்ரோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிய ஒரு லட்சம் கார்கள், 2001ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டு லட்சம், 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து லட்சம் என படிப்படியாக உயர்ந்து, மார்ச் 2006ம் ஆண்டு 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 லட்சம் கார்களை தயாரித்தோம். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 லட்சமாவது காரை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளோம்.





இங்கு உற்பத்தியாகும் கார்களில் 48 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஹுண்டாய் நிறுவனம் இந்திய அளவில் கார் உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு கார் தயாரிக்கப்படுகிறது. ஹுண்டாய் நிறுவனத்தில் கார்களுக்கான பராமரிப்பு உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கி.மீ., வரையில் பராமரிப்பு செலவு வாடிக்கையாளர்களுக்கு இல்லை. மோட்டார் உத்தரவாத திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் 294 விற்பனை மையங்கள் உள்ளன. 586 சர்வீஸ் சென்டர் மூலம் வாடிக்கையாளர்களின் கார்களை பராமரித்து வருகிறோம். இவ்வாறு பார்க் தெரிவித்தார். பொது மேலாளர் ரமேஷ், முதன்மை பாதுகாப்பு அலுவலர் நாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஸ்ரீதர், சத்தியசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

வர்த்தகம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க‌ த‌னி கோர்ட்

''வர்த்தக கோர்ட்டுகளை துவக்குவதற்கான மசோதா, பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்,'' என மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேலான தொகை சார்ந்த, வர்த்தகம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும். இதற்காக, 'ஐகோர்ட்டுகளின் வர்த்தகப் பிரிவு மசோதா 2009' பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும். இந்த வர்த்தக கோர்ட்டுகள் எல்லாம் ஐகோர்ட்டுகளின் டிவிஷன் பெஞ்சாக செயல்படும். கடந்த 1991ம் ஆண்டிலேயே பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டு விட்டது. ஆனால், வர்த்தக ரீதியான தகராறுகளைத் தீர்ப்பதற்கான நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. இந்தியாவில் சட்ட ரீதியாக பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் எனில், நிறைய கால அவகாசமாகும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். ஐகோர்ட்டுகள் வர்த்தகப் பிரிவு மசோதா 2009 நிறைவேறினால், வழக்கு விவகாரங்களில் புதிய சகாப்தம் உருவாகும். கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில், எந்த வழக்கும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தேங்கி நிற்காத நிலைமை உருவாக்கப்படும். 'நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க 300 ஆண்டுகளுக்கு மேலாகும்' என, அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ஒருவர் கூறியுள்ளார். இது, நம்பிக்கை இல்லாத மனப்பான்மையைக் காட்டுகிறது. பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் அதிலிருந்து ஓடுவது போன்றதாகும். இவ்வாறு மொய்லி கூறினார்.

மொபைல்போன்களுக்கான ஆன்டி வைரஸ் சொல்யூச‌ன்ஸ்

மொபைல் போன்களுக்கான ஆன்டி வைரஸ் சொல்யூச‌னை இன்னும் 12 மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக மேக்ஸ் செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த மேக்ஸ் செக்யூர் சாப்ட்வேர்ஸ் நிறுவன நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சஞ்சய் பிரதான் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : மொபைல்போன் உபயோகிப்பாளர்கள் இதுவரை, தங்கள் மொபைல் போன்களை கம்ப்யூட்டரின் துணையுடன் ஆன்டிவைரஸ் சாப்டவேரின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்ததாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, இன்னும் 12 மாதங்களில் மொபைல் ‌போன்கள் தங்களுக்குள்ளேயே ஸ்கேன் செய்யும் அளவிற்கு ஆன்டி வைரஸ் சொல்யூசனகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, இந்த நிதியாண்டில் 100 பே‌ரை புதிதாக பணியமர்த்த உள்ளதாக சஞ்சய் பிரதான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எஸ்டிடி அழைப்பு இனி நிமிடத்திற்கு 30 பைசா ம‌ட்டும்

இந்தியாவின் முன்னணி தனியார் தொலை தொடர்பு நிறுவனமான டாடா டெலிசர்வீஸ் நிறுவனம், எஸ்டிடி அழைப்புகள் நிமிடத்திற்கு 30 ‌பைசாவும், லோக்கல் அழைப்புகள் நிமிடத்திற்கு 50 பைசா எனும் புதிய டாரீப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அல்ட்ரா பிளான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தைப் பெற, ப்ரீபெய்டு உபயோகிப்பாளர்கள், ரூ. 58 மற்றும் ரூ. 104 ரீசார்ஜ் செய்வதன் மூலம், 3 மாதத்திற்கு இந்த பயனை அனுபவிக்கலாம் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.