Friday, August 6, 2010

எஸ்பிஐ-யில் புதிதாக 5,000 முகவர்கள்

தனியார் துறையைச் சேர்ந்த எஸ்.பீ.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. சிறப்பான செயல்பாட்டை கண்டு வரும் இந்நிறுவனம் அதன் ஒருங்கிணைப்பு சேவையை விரிவுபடுத்தும் வகையில் இவ்வாண்டு கூடுதலாக 20-25 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. மேலும் புதிதாக 5,000 முகவர்களை பணியில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் முகவர்களின் எண்ணிக்கை தற்போதைய 70,000 -ல் இருந்து 75,000-ஆக அதிகரிக்கும் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான எம்.என். ராவ் தெரிவித்தார். எஸ்.பீ.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ.114 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 195 சதவீதம் அதிகமாகும். இதே காலாண்டுகளில் இந்நிறுவனத்தின் மொத்த பிரிமிய வருவாய் 9.5 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,707 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் புதிய பிரிமியம் வாயிலான வருவாய் ரூ.976 கோடியாகும். குழும காப்பீடு வாயிலான வர்த்தகம் சுணக்கம் கண்டதையடுத்து புதிய பிரிமிய வருவாய் வளர்ச்சி சற்று குறைந்துள்ளது. நிறுவனத்தின் செலவினம் இத்துறையில் ஈடுபட்டு வரும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளது. எனவே செலவினங்களை குறைக்க வேண்டிய அவசியமில்லை என ராவ் குறிப்பிட்டார். எஸ்.பீ.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,350 கோடியாக உள்ளது. இதில் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.1,000 கோடியாகும். இது தவிர லாபத்திலிருந்து ரூ.350 கோடி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே நிறுவனத்தின் நிகர மதிப்பு நல்ல அளவில் உள்ளதால் புதிதாக மூலதனம் இட வேண்டிய அவசியமில்லை என ராவ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment