பருவ மழையும், காலாண்டு முடிவுகளும் சந்தைக்கு சாதகமாக இருக்கின்றன. ஆகவே, சந்தையும் முதலீட்டாளர்களை ஏமாற்றவில்லை. 18,000 என்ற தடையை தாண்டி சந்தை ஜோராக போய்க்கொண்டிருக்கிறது. திங்களன்று, 212 புள்ளிகளும், செவ்வாய், 34 புள்ளிகளும் கூடியிருந்தது. புதனன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை, 102 புள்ளிகள் கூடி, 18,217 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 28 புள்ளிகள் கூடி, 5,467 புள்ளிகளுடனும் முடிந்தது. வங்கிப் பங்குகள் சந்தை ஏறுவதற்கு பெரிய உறுதுணையாக இருந்தன. குறைந்து வரும் மியூச்சுவல் பண்டு
முதலீடுகள்: ஜூலையில் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடுகள் 11,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது. நிறைய முதலீட்டாளர்கள் பணம் எடுத்தது தான் காரணம். தற்போது எல்லா மியூச்சுவல் பண்டுகளிலும் சேர்த்து, 6,66,667 கோடி ரூபாய் உள்ளது. பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும் முதலீட்டாளர்கள் லாபம் பார்த்ததாலும் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு.
கூடிவரும் டிபாசிட் வட்டி விகிதங்கள்: வரும் வாரங்களில் டிபாசிட் வட்டி விகிதங்கள் கூடும், அது டிபாசிட்டர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்று கூறியிருந்தோம். அதன்படியே பல வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை கூட்டி உள்ளன. ஐந்தாண்டு டிபாசிட்டுக்கு தற்போது 8 சதவீதம் வரை கிடைக்கிறது. மூத்த குடிமகன்களுக்கு 0.5 சதவீதம் வட்டி கூடுதலாக கிடைக்கும். இன்னும் சிறிது கூடவும் வாய்ப்பு உண்டு. ரிசர்வ் வங்கியின் அடுத்த அறிவிப்புகளை வைத்து வட்டி விகிதங்கள் கூடலாம்.
காலாண்டு முடிவுகள்: என்.எம்.டி.சி., கெயில், ஹிண்டால்கோ ஆகிய கம்பெனிகள் நல்ல முடிவுகளை தந்துள்ளன. அதானி வாங்கிய ஆஸ்திரேலிய கம்பெனி: பல துறைகளில் இருந்து வரும் அதானி குழுமம் ஆஸ்திரேலியாவின் நிலக்கரி சுரங்கம் ஒன்றை, 12,600 கோடி ரூபாய்க்கு வாங்கவுள்ளது. அதானி பவர் நிறுவனத்திற்கு தொடர்ந்து எரிபொருள் கொடுக்க இந்த சுரங்கம் வழிசெய்யும்.
தங்கம் ஏன் சிறிது கூடியது? சீனாவில் வங்கிகள் தங்கம் இறக்குமதி, ஏற்றுமதி செய்ய உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற செய்தி வந்ததை அடுத்து தங்கம் விலை சிறிது கூட ஆரம்பித்தது. மேலும், இந்திய வணிகர்கள், தங்கம் விலை குறைந்துள்ளதால் வாங்கவும் ஆரம்பித்தனர். இது சந்தையில் தங்கத்தின் விலையை கூட்டியது.
டாலர் ரூபாய்: டாலருக்கு எதிரான ரூபாய் வலுப்பெற்று வருகிறது. 46 ரூபாய்க்கு அருகே வந்து விட்டது. மறுபடி ஏற்றுமதியாளர்களுக்கு கவலையளிக்கக் கூடிய தருணங்கள் தான். இப்படி மாறி மாறி மேலும் கீழும் இருப்பதால் ஏற்றுமதியாளர்களாலும் சரிவர கணிக்க இயலவில்லை.
ஏன் ரூபாய் வலு பெற்றது? இந்தியாவிற்குள் வெளிநாட்டுப் பணவரத்து அதிகமாக உள்ளது. இது சந்தையில் டாலரை வலுவிழக்க செய்கிறது. அதே சமயம் ஜூன் மாத ஏற்றுமதி கடந்தாண்டு ஜூன் மாத ஏற்றுமதியை விட, 30 சதவீதம் கூடுதலாக உள்ளது. இந்த ஜூனில் 17.74 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்துள்ளோம்.
புதிய வெளியீடுகள்: பஜாஜ் கம்பெனியின் ஒரு அங்கமான பஜாஜ் கார்ப் (அல்மாண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்) தங்களது புதிய வெளியீட்டை கொண்டு வந்துள்ளது. இன்று வரை இருக்கும். விலை ரூபாய் 630 முதல் 660 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் கம்பெனி என்பதால் சிறிது ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் போடலாம்.
இது தவிர இன்ஜினியர்ஸ் இந்தியா தனது வெளியீட்டின் விலையை ரூபாய் 290 என்றும், எஸ்.கே.எஸ்., மைக்ரோ பைனான்ஸ் தன் வெளியீட்டின் விலையை 985 ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளது. சிறிய முதலீட்டாளர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும். பட்டியலிடப்படும் போது இரண்டு கம்பெனிகளும் லாபத்தில் பட்டியலிடப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தை ஜம்மென 18,000த்தை தாண்டி விட்டது. இந்நிலையில் நிலைத்து நிற்க வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டுப் பணம் சந்தைக்குள் வருவதால் சந்தை பெரிய இறக்கங்களை சந்திக்க வாய்ப்பில்லை.
No comments:
Post a Comment