Saturday, July 17, 2010

பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு

பெட்ரோல், டீசல் விலையை முன்பு மத்திய பெட்ரோலிய அமைச்சகமே நிர்ணயம் செய்து வந்தது. இதன் காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்ளுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பு கடந்த மாதம் மிக அதிக அளவுக்கு சென்றது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவை, இது தொடர்பாக கூடி விவாதித்தது. அப்போது பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக உயர்ந்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மாறுவதற்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைக்க எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த விலை மாற்றத்தை எத்தகைய கால இடைவெளியில் செய்வது என்பதில் இந்திய எண்ணை நிறுவனங்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும், பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கலாம் என்று யோசனை கூறின. இதை இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்கவில்லை. இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை விலை நிர்ணயம் செய்தால், அது பதுக்கலுக்கு வழி வகுத்து விடும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா எண்ணை நிறுவன பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்தினார். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. அதன்படி மாதத்துக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை மாற்றி அமைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் படி வரும் 25 அல்லது 26-ந் தேதி பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணை விலை சற்று குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையை அதற்கு ஏற்ப சற்று குறைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அந்த வகையில் பெட்ரோல் விலை விரைவில் லிட்டருக்கு 20 பைசா குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத்பெட்ரோலியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மூன்றும் இந்த விலை குறைப்பை ஒரே மாதிரி நடைமுறைப்படுத்தும். தனியார் எண்ணை நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்களும் அரசு எண்ணை நிறுவனங்களை பின்பற்றி விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

அடுத்த நான்கு ஆண்டுகளில் (2014ம் ஆண்டுக்குள்) நம் நாட்டில் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 99.30 கோடியாக உயரும் என ஆய்வு நிறுவனமான கார்ட்னர் தெரிவித்துள்ளது. நடப்பு 2010ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 66 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் இருப்பர் என்றும் அதன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. செல்போன்கள் பயன்பாடு அதிகரிப்பதில், உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவே இரண்டாவது மிகப் பெரிய சந்தையாக உள்ளது. நடப்பாண்டு மே மாத நிலவரப்படி, நாட்டில் உள்ள செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 62 கோடியாகும். இது, சென்ற ஆண்டு இறுதியில் 52.50 கோடியாக இருந்தது. அதாவது, ஆண்டுக்கு 10 கோடி என்ற அளவில் இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, அடுத்த நான்கு ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 100 கோடி என்ற சாதனை அளவை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.நடப்பு நிதி ஆண்டில் இந்திய தொலைத் தொடர்பு துறையில் பல்வேறு நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் ரூ.4,000 கோடி முதலீடு மேற்கொள்ளும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 கோடி செல்போன் இணைப்புகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது.

விளைச்சல் குறைவால் மாம்ப‌ழ‌ விவ‌சாய‌ம் ந‌ஷ்ட‌ம்

வத்திராயிருப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான மாம்பழ சீசன் கடந்த வாரத்துடன் முழுமையாக முடிவடைந்தது. எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் அனேக இடங்களில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

ராஜபாளையம், ஸ்ரீவி., வத்திராயிருப்பு பகுதிகளில் 15,000 ஏக்கருக்கு மேல் மாம்பழ‌ விவசாயம் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் வரை மூன்று மாதங்கள் மாம்பழ சீசன் களைகட்டும்.



கடந்தாண்டு பருவமழை சரிவர பெய்யாததால் இந்த ஆண்டு சீசனில் வெயில் அதிகரித்து மாமரங்களில் பூத்த பூக்கள் எல்லாம் உதிர்ந்தன. வறட்சி நிலவியதால் மரங்களுக்கு நீர்பாய்ச்சவும் வழியின்றி போனது.உதிர்ந்த வடுக்கள்: இதன் காரணமாக இந்தாண்டு மாம்பழ சீசன் மந்தமாக துவங்கியது. சீசன் துவங்கிய பிறகு இடையிடையே சிறிது சாரல் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து ஒருசில பகுதிகளில் மரங்களில் புதிய பூக்கள் பூக்க துவங்கியது. பூத்தவையும் உதிரவில்லை. மே மாதம் ஒரளவு விளைச்சல் அதிகரித்தது. ஆனால் அதுவும் கடும் வெயிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வடுக்களிலேயே உதிர்ந்தது. தாமதமாக பூத்த பூக்களில் ஒருசில இடங்களில் விவசாயிகள் தண்ணீரை தெளித்து மரங்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி பூக்களை வெப்பத்திலிருந்து பாதுகாத்ததால் நஷ்டத்திலிருந்து தங்களை காத்துக்கொண்டனர்.விவசாயிகள் ஏமாற்றம்: மற்ற அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டது. வழக்கமாக ஜூன் மாதம் முடிய வேண்டிய சீசன் இந்தாண்டு இடையே தாமதமாக பூத்த பூக்களால் ஜூலை வரை நீடித்தது. அங்கொன்றும் இங் கொன்றுமாக காய்த்த காய்கள் அனைத்தும் கடந்த வாரத்துடன் முழுமையாக பறிக்கப் பட்டன.சொந்த நிலங்களில் விவசாயம் செய்பவர்களை தவிர குத்தகை எடுத்து விவசாயம் செய்தவர்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் எதிர் பார்த்த விளைச்சல் இல்லாததால் நஷ்டமே ஏற்பட்டது. இந்தாண்டு சீசன், நஷ்டத்துடன் முடிவடைந்ததால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.

கூகிளின் புதிய இணையதளம் "கூகிள் பைஃபர்"

இணையதள உலகில் அனைத்து பாகங்களிலும் தனது ஆக்கிரமிப்பை செலுத்தி வரும் கூகிள் நிறுவனம் சமீபத்தில் கூகிள் பைபர் எனும் அதிவேக இணைய இணைப்புக்களை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு கூகிள் பைஃபர் எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து வேலைகளிலும் மும்மூரமாக ஈடுபட்டுவரும் கூகிளுக்கு அதிகப்படியான ஆதரவு அனைத்துத் தரப்பிலும் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இந்த அதிவேக இணைய இணைப்பை பெற்றுக்கொள்ள முற்பதிவுகளும் மிக வேகமாக இடம்பெற்று வருகிறது. இதுவரை 1100 க்கும் மேற்பட்டோர் தங்களது பதிவுகளை மேற்கொண்டுள்ளார்கள் என கூகிள் தெரிவித்துள்ளது. எனவேதான் கூகிள் பைஃபர் தொடர்பான செய்திகளை தனது பாவனையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள கூகிள் புதிய இணைய தளத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அங்கு கூகிள் பைஃபர் தொடர்பான செய்திகளையும் அதன் வளர்ச்சிக்கட்டத்தினையும் கூகிள் எங்களோடு பகிர்வதோடு எமது கருத்துக்களை வழங்கவும் வழியமைத்துள்ளது. கூகிள் பைஃபர் தொடர்பான விடயங்களை நீங்களும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால் இந்த புதிய தளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.



சி-15 ராக்கெட் விண்ணில் செலுத்தி சாதனை


பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட், ஐந்து செயற்கைக்கோள்களுடன், திட்டமிட்டபடி  12-07-2010 விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்து சாதனை படைத்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்டுள்ள 16 பி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்களும் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளன. இவ்வாண்டு இறுதிக்குள் தொலைத்தொடர்பு மற்றும் வேளாண் செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளதாக, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்தியாவின், "கார்ட்டோசாட்-2 பி' தொலை உணர்வு செயற்கைக்கோள், இந்திய பொறியியல் மாணவர்கள் தயாரித்த ஸ்டட்சாட், அல்சாட் - 2ஏ, அய்சாட் - 1 மற்றும் டிசாட்- 1 ஆகிய துணை செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட், 56 மணி நேர, "கவுன்ட் டவுனு'க்குப் பின், நேற்று காலை சரியாக 9.22 மணிக்கு விண்ணில் சீறிப் பாய்ந்தது.ஏவப்பட்ட 20வது நிமிடத்தில், 9.42 மணிக்கு ஐந்து செயற்கைக் கோள்களையும், பூமியிலிருந்து 637 கி.மீ., தொலைவில், அவற்றுக்கான வட்டப்பாதையில் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் நிலை நிறுத்தியது. திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணில் பாய்ந்ததும், விஞ்ஞானிகள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுவதற்கு, இரண்டு வாரங்களாக சந்தித்த தொழில்நுட்ப இடர்ப்பாடுகள் சரி செய்யப்பட்டு, ஏவப்பட்டுள்ளது. இதற்காக உழைத்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள்.வரும் செப்., இறுதியில் ஜிசாட் - 5 என்ற தொலைநோக்கு செயற்கைக் கோள், ஜி.எஸ்.எல்.வி.,-எப் 06 ராக்கெட்டுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. வேளாண் திட்டங்களுக்கான ரிசோசாட் - 2 செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி.,-பி 16 ராக்கெட்டுடன் அக்., இரண்டாம் வாரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது.விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. விண்வெளி சூழலுக்கு ஏற்ப மனித உடலை தயார்படுத்துதல், ராக்கெட் ஏவுவதற்கான தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கும் இன்னும் மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன.


விண்வெளிக்கு 2013ல் ஆளில்லா விண்கலத்தையும், 2017ல் மனிதனையும் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.சந்திரயான் - 1 நிலவிலிருந்து எடுத்து அனுப்பிய போட்டோக்களை ஆராய்ந்து வருகிறோம். புகைப்படங்களில் காணப்படும் நிலவின் நிழல் பகுதிகளில் நீர் மற்றும் கனிம வளங்கள் உள்ளனவா என்பதைப் பற்றி ஆராய, வரும் 2013ல் சந்திரயான் - 2 அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.கடந்த ஏப்., 15ல் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் கிரையோஜெனிக் இன்ஜின் பழுதானதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். ஓராண்டுக்குள் கிரையோஜெனிக் இன்ஜின் இந்திய தொழில் நுட்பத்தில் வெற்றிகரமாக தயாரிக்கப்படும். நான்கு டன் வரை எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் அடுத்த தலைமுறைக்கான, "ஜி.எஸ்.எல்.வி.,-எம்கே 3' ராக்கெட் தயாரிப்பதற்கான சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
பி.எஸ்.எல்.வி., சி-15, கார்டோசாட் - 2 பி திட்ட இயக்குனர் உன்னிகிருஷ்ணன் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட், 80 கோடி ரூபாயில் வடிவமைக்கப்பட்டது. நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது. ஒன்று, மூன்றாம் நிலை திட எரிபொருளாலும், இரண்டு, நான்கு நிலைகள் திரவ எரிபொருளாலும் இயக்கப்பட்டது. ராக்கெட் 295 டன் எடையும், 44.4 மீட்டர் நீளமும் கொண்டது."கார்டோசாட் - 2 பி' செயற்கைக்கோள், 175 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. 0.8 மீட்டர் பகுத்தறியும் திறன் கொண்ட, அதிநுட்ப கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பூமியில் ஓடும் காரைக் கூட, துல்லியமாக படம் பிடிக்கலாம்.


செயற்கைக்கோள்கள் நகர்புற, கிராமப்புற கட்டமைப்பு வசதிகள், வட்டச் சாலைகள் அமைத்தல், நெடுஞ்சாலை மேம்பாடு, வனப்பகுதிகள் மற்றும் சதுப்பு நில காடுகளைக் கண்டறிதல், எரிவாயு குழாய் இணைப்பு, புதிய கால்வாய்கள் அமைப்பதற்காக உகந்த இடங்களைக் கண்டறிதல், காடுகளில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை கணக்கிடுதல் உள்ளிட்ட, நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பெரிதும் பயன்படும்.மதுரை, ஐதராபாத், வாரணாசி, திருப்பதி மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களின் படங்களை, கார்டோசாட் - 2 பி இன்று காலை 9.40 மணிக்கு, விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப உள்ளது.

கார்டோசாட் - 2 பி, ஐசாட் - 1 மற்றும் ஸ்டட்சாட் ஆகிய மூன்று செயற்கைக்கோள்களும் அதற்கான வட்டப்பாதையை அடைந்தது, நேற்று காலை 11.30 மணிக்கு உறுதி செய்யப்பட்டது. ஸ்டட்சாட் 11.30 மணி அளவில் பூமியை ஒரு முறை, அதன் சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது. கார்டோசாட் - 2 பி ஒரு நாளைக்கு 14 முறை பூமியைச் சுற்றி வரும்; இதற்கான ஆய்வுக்காலம் ஐந்து ஆண்டுகள். ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் 1,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு உன்னிகிருஷ்ணன் கூறினார்.பேட்டியின் போது ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய இயக்குனர் தத்தன், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் வீரராகவன், தொலை உணர்வு மற்றும் சிறு செயற்கைக்கோள்களுக்கான திட்ட இயக்குனர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளும் உடனிருந்தனர்.

பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட் நேற்று காலை 9.42 மணிக்கு அதன் இலக்கை அடையும் வரை, இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது. ராக்கெட் அதன் இலக்கை அடைந்தவுடன், விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கியும், கட்டித் தழுவியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய நிகழ்வான இந்த முயற்சியை, திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தனது மனைவியுடன் நேரில் வந்து, விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருடன் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் எம்.ஜி.கே.மேனனும் வாழ்த்தினர்.

பெங்களூரில் உள்ள நித்தி மீனாட்சி தொழில்நுட்ப மையம் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஆறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 30 பேரும் இணைந்து, ஸ்டட்சாட் செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். 55 லட்சம் ரூபாய் செலவில் இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.இந்த செயற்கைக்கோள், பருவ நிலை மாற்றம் மற்றும் வன வளங்கள் குறித்த தகவல்களைத் தயாரித்து அனுப்பும். இது, இரண்டு ஆண்டுகள் விண்ணில் ஆய்வுகளை நடத்தும். "இளைஞர்களான எங்களாலும் நாட்டுக்கு உதவ முடியும்' என பொறியியல் மாணவர்கள், செயற்கைக்கோளை தயாரித்து சாதித்துக் காட்டியுள்ளனர்.

பி.எஸ்.எல்.வி., சி-15, பி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் வரிசையில் 17வது ஆகும். கடந்த 1993 முதல் இதுவரை, பி.எஸ்.எல்.வி., - டி 1, பி.எஸ்.எல்.வி., சி-3 உள்ளிட்ட 17 ராக்கெட்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இவற்றில், 1993ம் ஆண்டு, செப்டம்பர் 20ம் தேதி, ஐ.ஆர்.எஸ்., - 1 ஈ செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி., - டி 1 ராக்கெட் தோல்வியடைந்தது.அதன் பின், நேற்று வரை செலுத்தப்பட்டுள்ள 16 பி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்களும் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளன. இவற்றில் கடந்த 2008ம் ஆண்டு, அக்டோபர் 22ம் தேதி, சந்திரயான் - 1 செயற்கைக்கோளுடன் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி-11 ராக்கெட் குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.எல்.வி., ராக்கெட், விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக, இந்திய விஞ்ஞானிகளை முதல்வர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.பி.எஸ்.எல்.வி., ராக்கெட் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட செய்தி கிடைத்ததும், இந்திய விண்வெளித் துறை விஞ்ஞானிகளுக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:நமது நாட்டு விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பின் பயனாக விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து, படிப்படியாக முன்னேறி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பறக்கவிடப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி- 15 ராக்கெட் ஐந்து செயற்கைக்கோள்களைச் சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்று, நமது நாட்டு விஞ்ஞானிகளின் மகத்தான ஆற்றலை உலகுக்கு பறைசாற்றியுள்ளது.இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை விஞ்ஞானிகள் அனைவருக்கும் தமிழக மக்களின் சார்பிலும், என் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுக்கள்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

கல்விக்காக ரூ.2.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

'இந்தியாவில் கல்விக்காக 2.25 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது,' என மத்திய மனித வளத்துறை மேம்பாட்டு இணை அமைச்சர் புரந்தேஸ்வரி தெரிவித்தார்.விருதுநகரில் நடந்த காமராஜர் பிறந்த தின விழாவை முன்னிட்டு விருதுநகர், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2ல் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருது வழங்கும் விழா நடந்தது. மாவட்ட காங்கிரஸ் அணி தலைவர் கணேசன், மாணவரணி டி.ஏ.நவீன், மாணிக்க தாகூர் எம்.பி., உட்பட காங்., கட்சி நிர்வாகிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி பேசியதாவது: கமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 15303 பள்ளிகளை 30000 பள்ளிகளாக மாற்றினார். பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்கள் சதத்தை 80 சதமாக உயர்த்தினார். கல்வி என்பது வகுப்பறையும், புத்தகமும், மதிப்பெண்ணும்தான் என்ற நிலை இன்று உள்ளது.மத்திய அரசு இந்தாண்டு கல்விக்காக 2.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 1.25 லட்சம் கோடி ஆரம்பக்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாணிக்க தாகூர் எம்.பி., தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் விருதுநகரில் 16 அல்லது 17ம் தேதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்கப்படுகிறது. இந்த பகுதியில் விரைவில் பாலிடெக்னிக் துவக்கப்படும், என்றார். பின்னர் 1,300 மாணவ, மாணவிகள், 167 ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது.

ப‌ங்கு வ‌ர்த்த‌க‌ நில‌வ‌ரம்


இந்திய பங்குச்சந்தை நேற்று (16/07/2010) நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.02 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 8.72 புள்ளிகள் அதிகரித்து 17918.18 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.30 புள்ளிகள் அதிகரித்து 5379.05 புள்ளிகளோடு காணப்பட்டது. தொடர்ந்து, 9.13 மணியளவில், சென்செக்ஸ் 0.83 புள்ளிகளும், நிப்டி 0.10 புள்ளிகளும் சரிவு கண்டு, பின் மீண்டும் 9.26 மணியளவில் சென்செக்ஸ் 8.13 புள்ளிகளும், நிப்டி 2.40 புள்ளிகளும் உயர்ந்தன. வர்த்தகத்தின் போது அவ்வப்போது இறக்க நிலையும் காணப்பட்டது. இன்று காலை வர்த்தக நேரம் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46.36 புள்ளிகள் அதிகரித்து 17955.82 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 15.15 புள்ளிகள் அதிகரித்து 5393.90 புள்ளிகளோடு காணப்பட்டது.இன்றைய நிலவரப்படி இந்திய‌ பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடனேயே முடிந்தது.

பணவீக்கம் 5-6 சதவீதம் குறைய வாய்ப்பு

இந்திய ரூபாயின் பணவீக்கம் 10.55 சதவீதமாக உயர்ந்திருந்தாலும், தென்மேற்குப் பருவ சாகுபடி முடிந்தபின், இந்த ஆண்டின் இறுதியில், 5 முதல் 6 சதவீதமாக குறையும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறியுள்ளார். “இப்போது 10.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. தென் மேற்கு பருவ மழையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சாகுபடி முடிந்தததும் அதன் விலைவாசி குறையத் தொடங்கும். அதற்கான அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 5 முதல் 6 சதவீதம் ஆகக் குறையும்” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.



டில்லி்யில் மட்டும் மதிப்புக்கூட்டு வரி குறைவு

டில்லி மக்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று குறைந்த விலையில் டீசல் வாங்கி வருவதைத் தடுக்க டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 7.5 சதவிகிதம் குறைத்துள்ளது டெல்லி அரசு. டீசல் மீது இதுவரை 20 விழுக்காடாக இருந்த மதிப்புக் கூட்டு வரியை 12.5 விழுக்காடாகக் குறைத்துள்ளது டெல்லி அரசு. இதனால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.70 குறைந்து ரூ.37.50 ஆகியுள்ளது. டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சி்த் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டில்லியில் டீசல் விலை அதிகமாக இருந்தத்தால் பக்கத்து மாநிலங்களான ஹிரியானாவிற்கும், உத்தரப் பிரதேசத்திற்கும் சென்று மக்கள் டீசல் வாங்கி வருகின்றனர். இந்த நிலையை தடுக்கவே டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டதாக ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். இந்த விலைகுறைப்பு இம்மாதம் 20ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கிற்கு போட்டியாக 'கூகுள் மீ'



சோசியல் நெட்வொர்க் இணையதளங்களில், ஆரம்பித்த சில நாட்களிலேயே அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக்கிற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் 'கூகுள் மீ' என்ற பெயரில் புதி‌ய இணையதளத்தை துவக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தி்த்த டிக் நிறுவனர் கெவின் ரோஸ், இந்த செய்தியை நம்ப முடியவில்லை எனினும், நம்பத்தகுந்த இடத்திலிருந்து இந்த தகவல் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தொழில்நுட்ப இணையதளங்களான மாஷபிள் மற்றும் டெக்கிரஞ்ச் உள்ளிட்ட தளங்களும் இந்த தகவலை உறுதி செய்துள்ளன. கூகுள் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே, விரைவில் 'கூகுள் மீ' இணையதளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்த ஆய்வுகள், தென் ஆப்ரிக்காவின் டப்ளின் நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக டெக்கிரஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கூகிள், 24சதவீதம் வருமானம் அதிகரிப்பு


இணைய தள ஜாம்பவானாகிய கூகிள் தனது 2010 இரண்டாம் காலாண்டிற்கான நிதி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த 2ம் காலாண்டு 24 ச‌தவிகிதம் வருமான அதிகரிப்பை தந்துள்ளதாக கூகிள் தெரிவித்துள்ளது.கூகிள் வெளியிட்டுள்ள 2ம் காலாண்டிற்கான நிதி அறிக்கையில் இருந்து பெறப்பட்ட சில முக்கிய குறிப்புக்கள் பின்வருமாறு. உழைக்கப்பட்ட வருமானம் 6820 மில்லியன் அமெரிக்க டாலர். கடந்த 2009 2ம் காலாண்டு வருமானம் 5520 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த 2ம் காலாண்டில் வருமான அதிகரிப்பு 24 சதவிகிதம் காணப்படுகிறது. மொத்த சொத்துக்களின் பெறுமதி 48,045 மில்லியன் அமெரிக்க டாலர் மொத்த வருமானத்தில் 48 சதவிகிதம் அமெரிக்கவிலும் மீதி 52 சதவிகிதம் சர்வதேச ரீதீயாகவும் உழைக்கப்பட்டதாகும்.





ஆக்சிஸ் வங்கியின் நிகர லாபம் அதிகரிப்பு



இந்தியாவி்ன முன்னணி தனியார்துறை வங்கிகளுள் ஒன்றான ஆக்சிஸ் வங்கி, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 742 கோடியை ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் ரூ. 562.04 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே காலாண்டுகளில், இந்த வங்கியின் வட்டி வருவாய் ரூ. 2,905,96 கோடியில் இருந்து ரூ. 3,325,59 கோடியாக அதிகரித்துள்ளது. வட்டிச் செலவீனம் ரூ. 1,859,93 கோடியில் இருந்து 1,811,82 கோடியாக குறைந்துள்ளது.

இந்தியாவுடன் ஈரான் முதலீடு பாதுகாப்பு ஒப்பந்தம்

இந்தியா, ஈரான் இடையே தற்போதுள்ள இரு தரப்பு வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இரு தரப்பு முதலீட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாக ஈரான் அமைச்சர் கூறியுள்ளார். புது டெல்லியில் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கி ஏற்பாடு செய்த ‘ஈரானில் முதலீட்டு வாய்ப்புகள்’ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஈரான் நாட்டு நிதியமைச்சர் முனைவர் செய்யது சம்சுதீன் உசேனி, இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்வது தொடர்பாக இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் தான் பேசப்போவதாகக் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம் கடந்த மூன்று ஆண்டுகளில் 60 விழுக்காடு அதிகரித்து 15 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்ந்துள்ளது, அதனை அடுத்த 5 ஆண்டுகளில் 30 பில்லியன் டாலர்களாக உயர்த்த முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் அவசியம் என்று கூறியுள்ளார். இந்தியாவின் எரிசக்தித் தேவைகளை நிறைவு செய்ய ஈரான் தயாராக உள்ளது என்று கூறிய உசேனி, எண்ணெய், எரிவாயு, சுரங்கம், கனிமங்கள், வாகன உற்பத்தி, போக்குவரத்து, இராசாயணம், மருந்து உற்பத்தி, ஜவுளி, விவசாயம், உணவுப் பதனிடல் ஆகியவற்றில் இந்தியாவின் முதலீட்டை ஈரான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.