நான்கு நாட்களாக கோவையில் நடந்த 'இன்டெக் 2010' கண்காட்சி, நேற்று நிறைவு பெற்றது; 410 கோடி ரூபாய் வர்த்தக விசாரணை நடந்துள்ளது.
கோவை கொடிசியா அரங்கில், கொடிசியா சார்பில் 12வது இன்டெக் தொழிற் கண்காட்சி,கடந்த 1ம் தேதி முதல் நடந்தது; நேற்று கண்காட்சி நிறைவு பெற்றது. இன்ஜினியரிங், வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப், லேத், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்களுக்கு உதவும் நவீன ரக கருவிகள், துணைப் பொருட்கள், மென்பொருட்கள், இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் உள்நாட்டு மிஷின் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அரங்குகள் அமைத்து, தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இக்கண்காட்சி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.
கொடிசியா சங்கத் தலைவர் கந்தசாமி கூறியதாவது: இந்த ஆண்டு 9,000 சதுர அடிப் பரப்பளவில் பிரமாண்டமான முறையில் கண்காட்சி அமைக்கப்பட்டது. 471 அரங்குகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதில் பெரும்பாலான மிஷின்கள் அரங்கிலேயே விற்பனையாகி விட்டன; கூடுதல் மிஷின்களுக்கு 'ஆர்டர்' கிடைத்துள்ளது. மிஷின் டூல்ஸ் தயாரிப்புக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளன. முன்பு நவீன தொழில்நுட்பங்களை அறிய பெங்களூரு, மும்பை, டில்லி போன்ற நகரங்களுக்கு கோவை தொழில் துறையினர் செல்ல வேண்டியதிருந்தது. தற்போது கோவையிலேயே அனைத்து புதிய தொழில்நுட்பங்களும் காட்சிக்கு வைக்கப்படுவதால், தொழில் துறையினர் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். தொழில் துறையினரின் ஆதரவால், இந்த ஆண்டு இன்டெக் கண்காட்சிக்கு பிரமாண்ட வெற்றி கிடைத்துள்ளது. இரண்டு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 410 கோடி ரூபாய்க்கு வர்த்தக விசாரணைகள் நடந்தன. இவ்வாறு கந்தசாமி கூறினார்.
No comments:
Post a Comment