Friday, August 6, 2010

வர்த்தகம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க‌ த‌னி கோர்ட்

''வர்த்தக கோர்ட்டுகளை துவக்குவதற்கான மசோதா, பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்,'' என மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேலான தொகை சார்ந்த, வர்த்தகம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும். இதற்காக, 'ஐகோர்ட்டுகளின் வர்த்தகப் பிரிவு மசோதா 2009' பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும். இந்த வர்த்தக கோர்ட்டுகள் எல்லாம் ஐகோர்ட்டுகளின் டிவிஷன் பெஞ்சாக செயல்படும். கடந்த 1991ம் ஆண்டிலேயே பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டு விட்டது. ஆனால், வர்த்தக ரீதியான தகராறுகளைத் தீர்ப்பதற்கான நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. இந்தியாவில் சட்ட ரீதியாக பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் எனில், நிறைய கால அவகாசமாகும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். ஐகோர்ட்டுகள் வர்த்தகப் பிரிவு மசோதா 2009 நிறைவேறினால், வழக்கு விவகாரங்களில் புதிய சகாப்தம் உருவாகும். கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில், எந்த வழக்கும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தேங்கி நிற்காத நிலைமை உருவாக்கப்படும். 'நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க 300 ஆண்டுகளுக்கு மேலாகும்' என, அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ஒருவர் கூறியுள்ளார். இது, நம்பிக்கை இல்லாத மனப்பான்மையைக் காட்டுகிறது. பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் அதிலிருந்து ஓடுவது போன்றதாகும். இவ்வாறு மொய்லி கூறினார்.

No comments:

Post a Comment