இந்தியாவின் முன்னணி தனியார் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எச்.டீ.எஃப்.சி. ஸ்டாண்டர்டு லைஃப் நிறுவனம், ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு 2010-11-ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில், புதிய பிரிமிய வருவாயாக ரூ.692.70 கோடியை திரட்டி உள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் திரட்டப்பட்ட தொகையை விட 63 சதவீதம் (ரூ.424.90 கோடி) அதிகம் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அமிதாப் சவுத்ரி தெரிவித்தார். ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் தனியார் துறையில் இந்நிறுவனம் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 7.4 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 12 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிறுவனம் அதன் செலவினங்களை குறைத்ததையடுத்து, வருவாய் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. சென்ற காலாண்டில், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வணிகம் ரூ.1,478.90 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டை விட 47.8 சதவீதம் (ரூ.1,000.50 கோடி) அதிகமாகும். இதே காலாண்டுகளில், நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட பிரிமிய வருவாய் 38.3 சதவீதம் அதிகரித்து, அதாவது ரூ.548.80 கோடியிலிருந்து ரூ.758.90 கோடியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் - ஜுன் காலாண்டு நிலவரப்படி, இந்நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 116 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.22,298 கோடியாக அதிகரித்துள்ளது. இது, சென்ற 2009-ஆம் ஆண்டின் இதே காலாண்டு இறுதியில் ரூ.10,307 கோடியாக இருந்தது என சவுத்ரி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment