விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெல்லம் விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கரும்பு அறுவடை பணி முடிந்ததாலும், சென்ற வாரத்தில் பெய்த மழை காரணமாகவும் வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி குறைந்து விட்டது. வரும் 11ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெல்லம் தேவை அதிகரித்துள்ளது.கவுந்தப்பாடி, சித்தோடு பகுதியில் உள்ள வெல்லம் சந்தைக்கு வடமாநில வியாபாரிகள் அதிகளவில் குவிகின்றனர். வெல்லம் விலை உயர்ந்துள்ளது. சதுர்த்திக்கு பின், ஆயுத பூஜை பண்டிகையின் போது, வெல்லத்தின் தேவை மேலும் அதிகரிக்கும். தற்போது வெல்லத்தின் விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்துள்ளது.
கவுந்தப்பாடி, சித்தோடு மார்க்கெட்டில் இரு வாரங்களுக்கு முன் நாட்டு சர்க்கரை திடம் 60 கிலோ 1,560 ரூபாய், மீடியம் 1,400, மட்டம் 1,300, உருண்டை வெல்லம் 30 கிலோ 750 முதல் 800 ரூபாய், அச்சு வெல்லம் 840 முதல் 910 ரூபாயாக விற்பனையானது. வெல்லம் தேவை அதிகரித்ததால் தற்போது உருண்டை வெல்லம் 30 கிலோ மூட்டை 740 முதல் 850 ரூபாய், நாட்டு சர்க்கரை பவுடர் 1,080 ரூபாய், திடம் 1,620 ரூபாய், மட்டம் 1,350 ரூபாய், அச்சு வெல்லம் 840 முதல் 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.வெல்லம் வியாபாரி ஒருவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கரும்பு அறுவடை சீஸன் முடிந்து விட்டதால் வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது. மழை பெய்த காரணத்தால் வெல்லம் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை பண்டிகை நெருங்குவதால் வெல்லம் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் சித்தோடு, கவுந்தப்பாடி சந்தைக்கு வரத் துவங்கியுள்ளனர். வெல்லம் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளதால், உற்பத்தியும் சூடுபிடித்துள்ளது. ஆயுத பூஜை வரை வெல்லம் விலை குறையாது. வெல்லம் தேவை அதிகரித்துக்கும் பட்சத்தில் வெல்லம் விலை கிலோவுக்கு மேலும் ஒரு ரூபாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment