Wednesday, August 4, 2010

சச்சினின் புதிய சாதனை



டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடி, புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் சச்சின். இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது. இது டெஸ்ட் அரங்கில் சச்சின் பங்கேற்கும், 169 வது போட்டியாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (168 வது போட்டி) சாதனையை தகர்த்தார் சச்சின். புதிய சாதனை படைத்துள்ள இவர், டெஸ்ட் கிரிக் கெட்டின் போக்கு, வெகுவாக மாறி விட்டது என்றார்.

இது குறித்து சச்சின் கூறியது: நான் கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த 20 ஆண்டுகளில், டெஸ்ட் கிரிக்கெட் பல்வேறு மாற்றங்கள் அடைந்து உள்ளது. ஒரு நாள் போட்டிகளின் தன்மையும் மாறி விட்டது. "டுவென்டி-20' போட்டிகளின் வரவுக்குப் பின், டெஸ்ட் போட்டிகளும் அதிரடிக்கு மாறி விட்டன. கடந்த 1989 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய போது, முன்னணி பவுலர் களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான், அப்துல் காதிர் ஆகியோரது பந்து வீச்சை எதிர்கொண்டது சற்று வித்தியாசமாக இருந்தது. இது தான் எனது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என மனதில் நினைத்தேன். ஆனால் அடுத்த போட்டியில், சிறப்பாக ஆடி ரன் குவித்தேன். அதற்குப் பின் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

மிகப்பெரிய கவுரவம்: "சச்சின் என்னைப் போலவே பேட்டிங் செய்கிறார்,'என ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் தெரிவித்ததை, கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதற்குப் பின் பிராட்மேன் தேர்வு செய்த உலக லெவன் வீரர்கள் பட்டியலில் என்னையும் இணைத்தது, புதிய உற்சாகத்தை அளித்தது. ஒரு விளையாட்டு வீரருக்கு, தலைசிறந்த வீரர்களின் பாராட்டு தன்னம்பிக்கை கொடுக்கும். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.


தகர்க்க முடியாது: சைமண்ட்ஸ்: அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சினின் சாதனையை இனி யாரும் தகர்க்க முடியாது என்றார் ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ். இது குறித்து அவர் கூறுகையில், "" சச்சினின் சாதனை பாராட்டுக்குரியது. அவரது சாதனையை இனி யாரும் நெருங்க முடியாது என நினைக்கிறேன். தற்போது கிரிக்கெட் விளையாடத் துவங்கி உள்ளவர்கள், இனி 160 முதல் 170 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார்களா என்பது சந்தேகம் தான்,'' என்றார்.

பேங்க் ஆப் பரோடாவின் நிகரலாபம் ரூ.859 கோடி

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.859.16 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.685.38 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், வங்கியின் வட்டி வருவாய் ரூ.4,032.11 கோடியிலிருந்து ரூ.4,726.96 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. வட்டிச் செலவினம் ரூ.2,827.41 கோடியிலிருந்து ரூ.2,868.97 கோடியாக அதிகரித்துள்ளது.



ஷிப்பிங் கார்ப்பரேஷன்ஸின் இரண்டாவது பங்குகள் வெளியீடு

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எஸ்.சி.ஐ) நிறுவனம், நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது பங்கு வெளியீட்டில், இந்நிறு வனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 10 சதவீத பங்கு களுடன், புதிய பங்குகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு கப்பல்கள் சேவையில் ஈடுபட்டு வரும் எஸ்.சி.ஐ. நிறுவனத்தில், மத்திய அரசு தற்பொழுது 80.12 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இது தவிர, 10 சதவீதத்திற்கும் மேலான பங்குகள் எல்.ஐ.சி. நிறுவனத்திடமும், மீதமுள்ள 3.15 சதவீத பங்குகள் பொதுமக்கள் வசமும் உள்ளன. மத்திய அரசு, அதன் நிதி பற்றாக்குறையை குறைத்துக் கொள்ளும் வகையில், நடப்பு நிதி ஆண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.40,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இவ்வகையில், எஸ்.சி.ஐ. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் இரண்டாவது பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் எஸ்.சி.ஐ.யின் இரண்டாவது பங்கு வெளியீட்டிற்கு ஒப்புதல் வேண்டி, மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இந்த நிலையில், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனம் ரூ.191 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.120 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.883 கோடியிலிருந்து ரூ.907 கோடியாக அதிகரித்துள்ளது.





பிரபஞ்சத்தின் ரகசியம் அறிய ஆவல்

பூமி உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பிரபஞ்சத்தில் எப்படி பிறந்தன என்பது குறித்து அறிந்து கொள்ள உலகில் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டது மிக சிறிதளவே. எனவே, மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அணுவை மோத விட்டு பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை அறியும் மிகப்பெரிய முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக இந்தியா, கனடா, சீனா உள்ளிட்ட விஞ்ஞானிகளும் பணியாற்றினர். இதற்காக, சுவிட்சர் லாந்தில் ஜெனீவா நகருக்கு வெளியே 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் "செர்ன்' என்ற இயற்பியல் சோதனைக்கூடம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு அருகேயும் இதே போன்று சிறியளவில் "டெவட்ரான்' என்ற இயற்பியல் சோதனை கூடம் அமைக்கப்பட்டது. சோதனைக்கூடத்தில் அணு உற்பத்தி செய்யும் இயந்திரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து, உற்பத்தி செய்யப்பட்ட அணுக்கள் பலமுறை சுற்றி அதிக திசைவேகத்துடன் ஒன்றின் மீது ஒன்று மோதும் படி செய்து, ஏற்படும் விளைவுகள் குறித்து அறிந்து கொள்வதால் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற ரகசியம் வெளிவரும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.
சுவிஸ் - பிரான்ஸ் எல்லையில் பூமிக்கடியில் "ஜீரோ' டிகிரி வெப்பநிலையில் சுரங்க அமைப்பில் கட்டப்பட்ட பரிசோதனை கூடத்தில் முதல் வெடிப்பு நடத்தப் பட்டது. 27 கி.மீ., தூரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு முனைகளிலிருந்து மின்காந்த விசையின் மூலம் சுழற்றி அனுப்பப்பட்ட புரோட்டான்கள் மிக வேகமாக வந்து மோதின. அப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய அணுவிலிருந்து 7 டிரில்லியன் "எலக்ட்ரான் ஓல்ட்' ஆற்றல் ஏற்பட்டது. "செரன்' அமைப்பின் தலைவர் ரால்ப்ஹியூர் கூறுகையில், "பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து கண்டறிவதில் விஞ்ஞானிகள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இது பாராட்ட வேண்டிய, மகிழ்ச்சியான செய்தி.
இங்கு அமைக்கப் பட்டுள்ள இயந்திரம் விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்துள்ளது. மேலும், இரண்டு வித்தியாசமான அணுக்கள் மோதும் போது தோன்றும் அதிக சக்தியை அறிந்து கொள்ள, தற்போது உள்ளதை விட நவீன இயற்பியல் சோதனைக்கூடம் தேவை. சமீபத்தில் நடந்த சோதனைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து "செரன்' தலைவர் ரால்ப்ஹியூர் வெளியிட்ட முடிவுகளை பாரிஸ் நகரில் நடந்த "இயற்பியல் உயர் சக்தி' என்ற சர்வதேச மாநாட்டில் குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்பியல் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.
தற்போதுள்ள சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் செய்த சோதனையில் பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து ஒரளவிற்கு தெரிந்தது கொள்ள முடிகிறது. ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரு வெடிப்பு காரணமாக பிரபஞ்சம் பிறந்தது என்பதை கொள்கையளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அடுத்ததாக 57 ஆயிரத்து 825 கோடி ரூபாய் செலவில் 50 மைல் நீளத்திற்கு சர்வதேச இயற்பியல் கூடம் அமைத்து சோதனைகள் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சோதனை சர்வதேச ஒத்துழைப்புடன் செய்யப்படும். "செரன்' சோதனை கூடத்தின் நோக்கம் உயர் சக்தி குறித்த ஆய்வு. ஆனால், ஹம்பர்க்கில் துவக்கப்படவுள்ள சர்வதேச பரிசோதனை கூடம் அதிக தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும்' என்றார்.

"கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில் அணுக்கள் மோதும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் ஏற்பட்டதால் அது நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின், வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது முதல் வெற்றி தான் தொடர்கிறது. முன்பு புரோட்டான்களுக்கிடையே மோதல் ஏற்பட வைத்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச பரிசோதனை கூடத்தில் இனி நடைபெறவுள்ள சோதனையின் போது, எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் எதிரெதிரானவைகளை மோத விட்டு நடைபெறும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்' என்கிறார் அணு இயற்பியல் அறிஞரான கே வார்ம்செர்.



நன்றி:தினமலர்



இரண்டாவது முறையாக எண்ணெய் விலை கிடுகிடு

எண்ணெய் வித்துக்களின் தட்டுப்பாட்டால் விலையேற்றமடைந்த எண்ணெய் விலை, மின் கட்டண உயர்வு அமலான மறு நிமிடமே, இரண்டாவது முறையாக மேலும் உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஜல்லிக்கரை, ஆந்திராவின் கடப்பா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தமிழக எண்ணெய் ஆலைகளுக்கு நிலக்கடலை வந்து கொண்டிருந்தது. வரத்து தற்போது முற்றிலும் நின்று விட்டதோடு, நிலக்கடலையின் விலையிலும் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இவ்விலை உயர்வு, அப்படியே எண்ணெயில் எதிரொலித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துக்களின் விலை உயர்வால், எண்ணெய் விலை லிட்டருக்கு இரண்டு முதல்மூன்று ரூபாய் வரை உயர்ந்தது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து எண்ணெய் விலை,நேற்று முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை கடைசி வாரம், லிட்டர் 76 ரூபாய்க்கு விற்பனையான கடலை எண்ணெய், ஐந்து ரூபாய் அதிகரித்து 81 ரூபாயானது. நேற்று இதன் விலையில் மேலும்இரண்டு ரூபாய் அதிகரித்து, லிட்டர் 83 ரூபாய்க்கு விற்கிறது. 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட டின் 1,215 ரூபாய்க்கு விற்றது, 1,245 ரூபாய்க்கு விற்கிறது. ரீபைன்ட் கடலை எண்ணெய், கடந்த வாரம் நான்கு ரூபாய் அதிகரித்து 89 ரூபாய் விற்றது; நேற்று மேலும் இரண்டு ரூபாய் அதிகரித்து, 91 ரூபாய்க்கு விற்கிறது.

கடலை எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வை அடுத்து, சூரிய காந்தி எண்ணெயின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம், லிட்டர் 55 ரூபாய்க்கு விற்ற சூரியகாந்தி எண்ணெய், ஆறு ரூபாய் நேற்று உயர்ந்து, 61 ரூபாய்க்கு விற்கிறது. இதே போல் 15 லிட்டர் கொண்ட டின், 825 ரூபாய்க்கு விற்றது, 915 ரூபாய்க்கு விற்கிறது. கடந்த வாரம் வரை 43 ரூபாய்க்கு விற்ற பாமாயில், நேற்று 45 ரூபாயானது. ஆனால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

 
எண்ணெய் வியாபாரி கிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் எண்ணெய் வித்துக்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, கடந்த வாரம் கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் விலை உயர்ந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்த அடுத்த நிமிடமே எண்ணெய் ஆலைகள், தங்களின் தயாரிப்புகளுக்கான விலையை ஏற்றின. கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் விலை, இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை சீசன் துவங்க உள்ள நிலையில், எண்ணெய்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கிருஷ்ணன் கூறினார்.



பசப்பும் "பிளாக்பெர்ரி"

''பிளாக்பெர்ரி மொபைல்போன்களில் பரிமாறப்படும் தகவல்களை இந்திய அரசு கண்காணிக்கும் வகையில், சர்வரை மாற்றி அமைக்குமாறு கேட்டிருந்த அந்நாட்டு கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை,'' என, 'ரிம்' நிறுவனம் கூறி விட்டது. இந்த பசப்பு பதிலால், இந்திய அரசு கடும் அதிருப்தியடைந்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அவ்வப்போது அச்சுறுத்தல் எழுவதால், மொபைல் போன்கள் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் அனைத்தையும், இந்திய அரசு கண்காணித்து வருகிறது. கனடா நாட்டிலுள்ள, 'ரிம்' நிறுவனத்தின் தயாரிப்பான 'பிளாக்பெர்ரி' மொபைல்போனை, லட்சக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். 'பிளாக்பெர்ரி' மொபைல் மூலம் பரிமாறப்படும் தகவல்களை இடைமறித்து கேட்கும் வசதி இந்தியாவிடம் இல்லை. இந்த போனுக்கான சர்வர் கனடாவில் உள்ளதால், இதன் பிரத்யேக குறியீடுகளை கண்காணிக்க, அந்த சர்வரில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் அல்லது இந்தியாவில் ஒரு சர்வர் நிர்மாணிக்க வேண்டுமென, மத்திய உள்துறை அமைச்சகம், 'ரிம்' நிறுவனத்திடம் கேட்டிருந்தது. முதலில் தயங்கிய இந்நிறுவனம், 'அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் தனியாக சர்வர் அமைத்துள்ளீர்கள். எங்களுக்கு கண்காணிப்பு வசதி ஏற்படுத்தி தரவில்லையெனில், இந்தியாவில் 'பிளாக்பெர்ரி' மொபைல் போன்களில் செயல்பாடுகளை முடக்கி விடுவோம்' என, இந்தியா எச்சரித்ததை அடுத்து, வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி கூறியது. ஆனால் நேற்று, தன் நிலையிலிருந்து 'ரிம்' நிறுவனம் பின் வாங்கி விட்டது.

அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கோரிக்கையை எங்களால் நிறைவேற்ற இயலவில்லை. 'பிளாக்பெர்ரி' மொபைல் போன்களில் பரிமாறப்படும் தகவல்களை, கண்காணிப்பு ஏஜன்சிகள் மட்டுமல்ல; எங்களால் கூட படிக்க முடியாது. வாடிக்கையாளர்களின் வசதிக்காகவே இது போன்ற பாதுகாப்பு வடிவமைப்பை, மொபைல்போன்களில் ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'ரிம்'மின் இந்த அறிக்கையால், இந்திய அரசு கடும் அதிருப்தியடைந்துள்ளது. ஏனெனில் இந்தியாவில், 10 லட்சம் 'பிளாக்பெர்ரி' மொபைல் உள்ளதென்பதால், அரசுக்கு கூடுதல் பிரச்னை எழுந்திருக்கிறது.

கெரசின் லிட்டருக்கு ரூ.11.50

தமிழகத்தில் ரேஷனில் வழங்கப்படும் கெரசின் விலை அதிரடியாக லிட்டருக்கு, மூன்று ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. லிட்டர் 11.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. விலை உயர்வு, ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

 
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் கெரசின் வழங்கப்படுகிறது. சிலிண்டர் அல்லாத குடும்ப அட்டைகளுக்கு 10 லிட்டரும், ஒரு சிலிண்டர் அட்டைகளுக்கு மூன்று லிட்டரும், விடுபட்டு, புதிதாக வழங்கப்பட்ட அட்டைகளுக்கு மூன்று லிட்டர் என கெரசின் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வரை சென்னையில் ஒரு லிட்டர் 8.40 ரூபாயாகவும், பிற மாவட்டங்களில் தூரத்தின் தன்மைக்கேற்ப ஒன்பது ரூபாய் வரையும் விற்பனையானது. தற்போது கெரசின் விலை திடீரென லிட்டருக்கு மூன்று ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் 11.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு ஆக., 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

 
உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, 'மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியதால், கெரசின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் லிட்டர் 11.50 ரூபாயாகவும், பிற மாவட்டங்களில் தூரத்தின் தன்மைக்கேற்ப 12 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது' என்றனர்.