''சென்னை தொழிற்சாலையில் 12 ஆண்டுகளில் 30 லட்சம் கார்கள் தயாரித்து சாதனை படைத்துள்ளோம்' என்று ஹுண்டாய் நிர்வாக இயக்குனர் பார்க் தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 30 லட்சமாவது கார் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. தொழிற்சாலை உற்பத்திப் பிரிவு துணைத் தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் அரவிந்த் சக்சேனா முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் எச். டபிள்யூ பார்க், 30 லட்சமாவது காரை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ஹுண்டாய் கார் தொழிற்சாலை 1996ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டு கட்டப்பட்டது. 1998ம் ஆண்டு சிறிய ரக சான்ரோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிய ஒரு லட்சம் கார்கள், 2001ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டு லட்சம், 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து லட்சம் என படிப்படியாக உயர்ந்து, மார்ச் 2006ம் ஆண்டு 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 லட்சம் கார்களை தயாரித்தோம். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 லட்சமாவது காரை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளோம்.
இங்கு உற்பத்தியாகும் கார்களில் 48 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஹுண்டாய் நிறுவனம் இந்திய அளவில் கார் உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு கார் தயாரிக்கப்படுகிறது. ஹுண்டாய் நிறுவனத்தில் கார்களுக்கான பராமரிப்பு உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கி.மீ., வரையில் பராமரிப்பு செலவு வாடிக்கையாளர்களுக்கு இல்லை. மோட்டார் உத்தரவாத திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் 294 விற்பனை மையங்கள் உள்ளன. 586 சர்வீஸ் சென்டர் மூலம் வாடிக்கையாளர்களின் கார்களை பராமரித்து வருகிறோம். இவ்வாறு பார்க் தெரிவித்தார். பொது மேலாளர் ரமேஷ், முதன்மை பாதுகாப்பு அலுவலர் நாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஸ்ரீதர், சத்தியசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment