கடன் உதவி தரும் தனியார்களை, "பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்' என்ற பெயரில் வங்கிகளுடன் இணைந்து பணப்பரிவர்த்தனை புரிய அங்கீகாரம் தரலாம் என்று முன்னாள், "செபி' தலைவர் தாமோதரன் கூறினார். வங்கிகள் எல்லாருக்கும் கடன் தர முடியவில்லை. ஆனால், அவ்வப்போது கேட்டதும் பணம் தரக்கூடிய, "வட்டிக்கு பணம் தருபவர்கள்' அதிக வட்டி வசூலித்தாலும் பணம் தருகின்றனர். கிராமப்புறங்களில் இவர்கள் முக்கியமாக பணியாற்றுகின்றனர். கிராமப்புறங்களில் குறைந்த அளவு அவசரத்திற்கு கடன் பெறுபவர்கள் இரண்டு வட்டிக்கும் குறையாமல் தந்து பணம் பெறுகின்றனர். இவர்கள் வசதியாக கடன் பெற லைசென்சுடன், "வட்டிக்கு பணம் தருபவர்கள்' என்று தொழில் நடத்துபவர்களை வங்கிகளின் "வர்த்தக தொடர்பாளர்களாக ' ( பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்) நியமிக்கலாம் என்று முன்னாள், "செபி' அமைப்பின் தலைவர் தாமோதரன் யோசனை கூறினார். அவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கித் தகவலின் படி நாட்டில் உள்ள மொத்த மக்களில் 40 சதவீதம் பேர் மட்டுமே வங்கிக்கணக்கு வைத்திருக்கின்றனர். அப்படியிருக்கும் போது அதிக வங்கிக் கிளைகள் மட்டும் திறப்பதால் மிகவும் அடித்தட்டில் இருப்பவர்களுக்கு கடன் வசதி கிடைக்க வழியில்லை. அதே சமயம் கிராமங்களில் சிறு சிறு அமைப்புகளிடம் வாங்கும் கடன் உதவிக்கு 27 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. இப்படி பணம் தருபவர்களை மக்கள் நம்பித்தான் வாழவேண்டும். மாறாக வங்கிகள் சேவை சிறக்கவும், இம்மாதிரி லைசென்சுடன் பணம் தருபவர்களை, "பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்' என்று நியமிக்கலாம். இவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு டிபாசிட் சேகரிப்பது, பரஸ்பர முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துதல், மற்றும் சிறிய அளவிலான கடன் தருவது ஆகியவற்றில் ஈடுபடலாம். இதன் மூலம் வட்டி அளவு குறையும். இது வங்கி நடைமுறைகள் கடைசி மட்டத்தில் உள்ள மக்களுக்கு அடையவும் உதவிடும். வங்கி நடைமுறைகள் சிறக்க உதவும். இவ்வாறு தாமோதரன் கூறினார்.
No comments:
Post a Comment