நடப்பு நிதி ஆண்டில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 4,000 கோடி டாலர் (சுமார் ரூ.1.80 லட்சம் கோடி) மதிப்பிற்கு உயரும் என பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மதிப்பீடு செய்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டில் 3,270 கோடி டாலராக இருந்தது. ஆக, நடப்பாண்டில் இச்சாதனங்கள் ஏற்றுமதி 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008-09-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 4,050 கோடி டாலராக இருந்தது. இந்நிலையில், உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஜுன் மாதத்தில் நம் நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, சென்ற ஆண்டின் ஜுன் மாதத்தை விட, 90 சதவீதம் உயர்ந்து 510 கோடி டாலராக உயர்ந்துள்ளது. சென்ற மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 30.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
Monday, August 16, 2010
அரசு மானியம் கிடைக்காததால் கதர் விற்பனை மந்தம்
சுதந்திர தின விழாவையொட்டி காதி பொருட்களுக்கு அரசின் தள்ளுபடி சலுகை வழங்காததால் கதர் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட சர்வோதய சங்கங்கள் மூலம் 10 ஆயிரம் சர்வோதயா நிறுவனங்கள், காதி பவன்கள் செயல்பட்டு வருகின்றன. சர்வோதயா நிறுவனங்களில் காமராஜர், அண்ணாதுரை, பெரியார், இந்திரா பிறந்த நாள் விழாக்கள், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகைகள் என ஆண்டுக்கு 90 நாட்களில் கதர், பாலி வஸ்திரா, கம்பளி துணி களுக்கு 30 சதவீதம், பட்டுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுவது வழக்கம். தள்ளுபடி தொகையை சம்மந்தப்பட்ட சர்வோதயா சங்கங்களுக்கு மத்திய அரசு 20 சதவீதம், மாநில அரசு 10 சதவீதம் மானியமாக வழங்கி விடும். இதனால் கதர் பொருட் களை பயன்படுத்துவோர், சலுகை நாட்களில் அதிகளவில் பொருட்களை வாங்கி வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் 12வது நிதி கமிஷனின் புதிய உத்தரவால் காதி பொருட்கள் விற்பனைக்கு தள்ளுபடி இல்லை. இம்மானியத்தை நுõற்போர், நெய்வோர்களுக்கு வழங்கும் வகையில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் சர்வோதயா சங்கங்கள் இந்த ஆண்டு முதல் தள்ளுபடி சலுகை வழங்க முடியவில்லை. ஒவ்வொரு சுதந்திர தினவிழாவிற்கும் காதி பொருட்களுக்கு தள்ளுபடி சலுகை கிடைத்தது. கால மாற்றத்திற்கு ஏற்ப ஜவுளி நிறுவனங்கள் வித, விதமாக துணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்து வரும் நிலையில் இவற்றுடன் போட்டி போட முடியாமல் சர்வோதய சங்கங்கள் தள்ளாடி வருகின்றன.
இந்நிலையில் முக்கிய நாட்களுக்கு தள்ளுபடி சலுகை வழங்காததால் ஏற்கனவே காதி பொருட்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடுகிறது. இதனால் காதிபவன்களில் கதர் உள்ளிட்ட இதர பொருட்கள் விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. மத்திய அரசு புதிதாக அறிவித்த தள்ளுபடி மானியம் நெசவாளர்களுக்கும் முறையாக சென்றடையவில்லை. காதிப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கும் மானியம் இல்லை. வழக்கம் போல் தள்ளுபடி சலுகை வழங்கினால்தான் கதர் ஆடை உடுத்துபவர்களை தக்க வைத்து கொள்ள முடியும் என காதி விற்பனையாளர்கள் கருதுகின்றனர்.
மாருதி சுசுகி புதிய சாதனை
மாருதி சுசுகி நிறுவனம், இயற்கை எரிவாயு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் புதிய ரக கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில், மாருதி சுசுகி நிறுவனத்தின் இயற்கை எரிவாயு தொழில்நுட்பம் (சி.என்.ஜி.,) மூலம் இயங்கும் கார்களை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிமுகப்படுத்தி வைத்தார். இவ்விழாவில், மாருதி குழும அதிகாரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இயற்கை எரிவாயு தொழில்நுட்பம், மாருதியின் எஸ்.எக்ஸ்.4, எக்கோ, வேகன் ஆர், எஸ்டிலோ மற்றும் ஆல்டோ ஆகிய கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகைக் கார் இன்ஜின்களில் 'இன்டெலிஜன்ட்- கேஸ் போர்ட் இன்ஜெக்ஷன்' என்ற புதிய தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புரோக்கர்களுக்கு 'செபி' எச்சரிக்கை
முதலீட்டாளர்களின் வர்த்தக் கணக்குளில் இருந்து பணத்தை புரோக்கர்கள் தவறுதலாக பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு மாதமோ அல்லது காலாண்டிலோ, முதலீட்டாளர்களின் பயன்படுத்தாத பணத்தை திருப்பியளித்து விடவேண்டும் என்று 'செபி' எச்சரித்துள்ளது. முதலீட்டாளர்களின் வர்த்தகக் கணக்குகளில் இருந்து, புரோக்கர்கள், பங்குச் சந்தை நிலவரத்தை பொருத்து முதலீடு செய்வர். ஆனால், முதலீடு செய்தது போக மிச்சமுள்ள பணத்தை தவறுதலாக கையாள்வதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து, 'செபி' பங்குச் சந்தை புரோக்கர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களின் தேர்வுப்படி, ஒவ்வொரு மாதமோ அல்லது காலாண்டிலோ, வாடிக்கையாளர்களின் பயன்படுத்தப்படாத பணம் உள்ளிட்ட அவர்களின் மொத்த வர்த்தகக் கணக்கையும் வாடிக்கையாளர்களிடம் கொடுத்து விட வேண்டும். வர்த்தகக் கணக்குடன் கணினி மூலம் இணைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இனி புரோக்கர்கள் மிச்சமுள்ள பணத்தைச் செலுத்தி விட வேண்டும். இ-பேங்கிங் வசதி இல்லாத வாடிக்கையாளர்களுக்கு 'செக்' மூலம் பணத்தை அனுப்பி விட வேண்டும். இதன் மூலம், புரோக்கர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையிலான பரிவர்த்தனையில் வெளிப்படைத் தன்மை ஏற்படும். மேலும் முதலீட்டாளர்களின் பணம் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும்.
வட்டி உயர்வு குறித்து ஸ்டேட் பாங்க் விரைவில் அறிவிப்பு
"முதன்மைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து, பாரத ஸ்டேட் வங்கி இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யும்" என்று அந்த வங்கியின் தலைவர் ஓ.பி.பட் தெரிவித்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஓ.பி.பட் இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வங்கியின் சொத்துக் கடன்களுக்கான கமிட்டி (அல்கோ) இன்னும் ஓரிரு நாட்களில் கூடும். வங்கியின் காலாண்டு அறிக்கை வெளிவந்துள்ள இந்நிலையில், வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து ஆலோசிப்போம். அனைத்து வங்கிகளும் தங்கள் வைப்பு நிதி மற்றும் முதன்மைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து விட்டன. அதனால் 0.25 சதவீதம் முதன்மைக் கடன்களுக்கான வட்டியை அதிகரிப்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம்' என்று அவர் தெரிவித்தார். சமீபத்தில் பஞ்சாப் தேசிய வங்கி, பரோடா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் கனரா வங்கி ஆகியவை தங்கள் முதன்மைக் கடன்களுக்கான வட்டியை 0.50 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வர்த்தகக் கூட்டமைப்பு பரிந்துரை
"உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 8 சதவீதத்தை எட்ட வேண்டுமானால், தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று, தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்.ஐ.சி.சி.ஐ) கூறியுள்ளது. தற்போது இந்தியாவில், அமைப்பு சாரா துறைகளையும் சேர்த்து, மொத்தம் 45 கோடியே 70 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். 2022க்குள் இந்தியா, 8 சதவீத உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைய 50 கோடி திறன் மேம்பாடுடைய பணியாளர்கள் இந்தியாவுக்குத் தேவை. இத்தேவையை எதிர்கொள்வதற்கு, எப்.ஐ.சி.சி.ஐ, சில ஆலோசனைகளைக் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்குத் தேவையான 50 கோடி பணியாளர்களை உருவாக்க தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தற்போது ஒவ்வொரு ஆண்டும், திறன் மேம்பாடு உடைய பணியாளர்கள் 34 லட்சம் பேர் மட்டுமே பணியில் சேர்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்தை எட்ட வேண்டும். அதற்கு திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாகன உதிரிபாகங்கள், ரியல் எஸ்டேட், சுகாதாரத் துறை, ஜவுளித் துறை, மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் பொருளாதார வளர்ச்சியிலும், கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரியிலிருந்து வாயு எடுக்க கோல் இந்தியா புதிய முயற்சி
மத்திய அரசின், 'நவரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா' (சி.ஐ.எல்.,) நிறுவனம், நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டத்தை இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஒரிசா மாநிலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டம், ஒரிசா மாநிலம் தல்சார் என்ற இடத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இத்திட்டத்தில், 'கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' மற்றும் 'ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ்' என்ற பொதுத் துறை நிறுவனங்களோடு இணைந்து சி.ஐ.எல்., செயல்படத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சி.ஐ.எல்., சேர்மன் எஸ்.பட்டாச்சார்யா கூறியதாவது: தல்சாரில் தற்போது இயங்காமல் இருக்கும் ஆர்.சி.எப்., நிறுவனத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு 'மகாநதி கோல்பீல்ட்ஸ்' நிறுவனம், 50 லட்சம் டன் நிலக்கரியை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. சி.ஐ.எல்., ஏற்கனவே இத்திட்டத்தை பூமிக்கடியில் செயல்படுத்தியது. ஆனால், ரஷ்யாவில் மக்கள் வசிக்காத உள்ளடங்கிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதைப் போல் அல்லாமல், நம் நாட்டில் மக்கள் வசிக்கும் இடங்களிலேயே செயல்படுத்த வேண்டியிருப்பதால், நீர் விரைவில் மாசுபட்டு விடுகிறது. நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் அமோனியம் நைட்ரேட்டிலிருந்து தான் யூரியா உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். தற்போது நிலக்கரித் துறையில் 7 சதவீதம் வரை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பட்டாச்சார்யா தெரிவித்தார். நிலக்கரியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வாயு, தொழிற்சாலைகளுக்குப் பயன்படும்.
Subscribe to:
Comments (Atom)