Monday, August 16, 2010

நிலக்கரியிலிருந்து வாயு எடுக்க கோல் இந்தியா புதிய முய‌ற்சி

மத்திய அரசின், 'நவரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா' (சி.ஐ.எல்.,) நிறுவனம், நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டத்தை இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஒரிசா மாநிலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. நிலக்கரியிலிருந்து வாயு எடுக்கும் திட்டம், ஒரிசா மாநிலம் தல்சார் என்ற இடத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இத்திட்டத்தில், 'கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' மற்றும் 'ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ்' என்ற பொதுத் துறை நிறுவனங்களோடு இணைந்து சி.ஐ.எல்., செயல்படத் திட்டமிட்டுள்ளது.



இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சி.ஐ.எல்., சேர்மன் எஸ்.பட்டாச்சார்யா கூறியதாவது: தல்சாரில் தற்போது இயங்காமல் இருக்கும் ஆர்.சி.எப்., நிறுவனத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு 'மகாநதி கோல்பீல்ட்ஸ்' நிறுவனம், 50 லட்சம் டன் நிலக்கரியை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. சி.ஐ.எல்., ஏற்கனவே இத்திட்டத்தை பூமிக்கடியில் செயல்படுத்தியது. ஆனால், ரஷ்யாவில் மக்கள் வசிக்காத உள்ளடங்கிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதைப் போல் அல்லாமல், நம் நாட்டில் மக்கள் வசிக்கும் இடங்களிலேயே செயல்படுத்த வேண்டியிருப்பதால், நீர் விரைவில் மாசுபட்டு விடுகிறது. நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் அமோனியம் நைட்ரேட்டிலிருந்து தான் யூரியா உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். தற்போது நிலக்கரித் துறையில் 7 சதவீதம் வரை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பட்டாச்சார்யா தெரிவித்தார். நிலக்கரியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வாயு, தொழிற்சாலைகளுக்குப் பயன்படும்.

No comments:

Post a Comment