சுதந்திர தின விழாவையொட்டி காதி பொருட்களுக்கு அரசின் தள்ளுபடி சலுகை வழங்காததால் கதர் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட சர்வோதய சங்கங்கள் மூலம் 10 ஆயிரம் சர்வோதயா நிறுவனங்கள், காதி பவன்கள் செயல்பட்டு வருகின்றன. சர்வோதயா நிறுவனங்களில் காமராஜர், அண்ணாதுரை, பெரியார், இந்திரா பிறந்த நாள் விழாக்கள், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகைகள் என ஆண்டுக்கு 90 நாட்களில் கதர், பாலி வஸ்திரா, கம்பளி துணி களுக்கு 30 சதவீதம், பட்டுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுவது வழக்கம். தள்ளுபடி தொகையை சம்மந்தப்பட்ட சர்வோதயா சங்கங்களுக்கு மத்திய அரசு 20 சதவீதம், மாநில அரசு 10 சதவீதம் மானியமாக வழங்கி விடும். இதனால் கதர் பொருட் களை பயன்படுத்துவோர், சலுகை நாட்களில் அதிகளவில் பொருட்களை வாங்கி வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் 12வது நிதி கமிஷனின் புதிய உத்தரவால் காதி பொருட்கள் விற்பனைக்கு தள்ளுபடி இல்லை. இம்மானியத்தை நுõற்போர், நெய்வோர்களுக்கு வழங்கும் வகையில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் சர்வோதயா சங்கங்கள் இந்த ஆண்டு முதல் தள்ளுபடி சலுகை வழங்க முடியவில்லை. ஒவ்வொரு சுதந்திர தினவிழாவிற்கும் காதி பொருட்களுக்கு தள்ளுபடி சலுகை கிடைத்தது. கால மாற்றத்திற்கு ஏற்ப ஜவுளி நிறுவனங்கள் வித, விதமாக துணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்து வரும் நிலையில் இவற்றுடன் போட்டி போட முடியாமல் சர்வோதய சங்கங்கள் தள்ளாடி வருகின்றன.
இந்நிலையில் முக்கிய நாட்களுக்கு தள்ளுபடி சலுகை வழங்காததால் ஏற்கனவே காதி பொருட்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடுகிறது. இதனால் காதிபவன்களில் கதர் உள்ளிட்ட இதர பொருட்கள் விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. மத்திய அரசு புதிதாக அறிவித்த தள்ளுபடி மானியம் நெசவாளர்களுக்கும் முறையாக சென்றடையவில்லை. காதிப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கும் மானியம் இல்லை. வழக்கம் போல் தள்ளுபடி சலுகை வழங்கினால்தான் கதர் ஆடை உடுத்துபவர்களை தக்க வைத்து கொள்ள முடியும் என காதி விற்பனையாளர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment