Monday, August 16, 2010

தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வர்த்தகக் கூட்டமைப்பு பரிந்துரை

"உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 8 சதவீதத்தை எட்ட வேண்டுமானால், தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று, தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்.ஐ.சி.சி.ஐ) கூறியுள்ளது. தற்போது இந்தியாவில், அமைப்பு சாரா துறைகளையும் சேர்த்து, மொத்தம் 45 கோடியே 70 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். 2022க்குள் இந்தியா, 8 சதவீத உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைய 50 கோடி திறன் மேம்பாடுடைய பணியாளர்கள் இந்தியாவுக்குத் தேவை. இத்தேவையை எதிர்கொள்வதற்கு, எப்.ஐ.சி.சி.ஐ, சில ஆலோசனைகளைக் கூறியுள்ளது.



இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்குத் தேவையான 50 கோடி பணியாளர்களை உருவாக்க தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தற்போது ஒவ்வொரு ஆண்டும், திறன் மேம்பாடு உடைய பணியாளர்கள் 34 லட்சம் பேர் மட்டுமே பணியில் சேர்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்தை எட்ட வேண்டும். அதற்கு திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாகன உதிரிபாகங்கள், ரியல் எஸ்டேட், சுகாதாரத் துறை, ஜவுளித் துறை, மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் பொருளாதார வளர்ச்சியிலும், கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment