Friday, July 30, 2010

பிராவிட‌ன்ட் நிதி திட்ட‌த்தில் புதிதாக இ-பேமெண்ட் முறை

தேசிய மின் பண பரிவர்த்தனை மற்றும் வங்கி ஒருங்கிணைப்பு கோர் பேங்கிங் மூலம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம் , தனது பயனாளிகளுக்கு இ - பேமெண்ட் முறையில் பணம் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் இரண்டொரு நாட்களில் வங்கி கணக்குகளில் பயனாளிகள் பணம் பெறலாம். இது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, இந்த திட்டத்திற்கு பயனாளிகள் தங்களது வங்கி கணக்கு புத்தக்தின் முதல் பக்க நகலில், கையெழுத்துடன் சுய உறுதி அளிக்க வேண்டும் அல்லது க்ளைம் மனுவுடன் ஒருப்பிழப்பு செய்யப்பட்ட காசோலையின் நகலையும் வழங்கலாம். இதனால் பணம் உடனடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும் உறுப்பினர்கள் தங்களது மொபைல் போன் நம்பரையும் தெரிவிக்கவேண்டும். இதனால் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கும் தகவல்களை பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.



மாற்றுத் திறனாளிகள் திருமண தம்பதியருக்கு 25ஆயிரம் நிதியுத‌வி

மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். வருமான உச்ச வரம்பும் நீக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்யும் இயல்பான நிலையில் உள்ளவர்களை ஊக்குவிக்க, திருமண நிதியுதவித் திட்டம் 1986ல் துவக்கப்பட்டது. ஒரு மாற்றுத் திறனாளியை மற்றொரு மாற்றுத் திறனாளி திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை, 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த உள்ளதாக, முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, வருமான உச்ச வரம்புத் திட்டத்தின் கீழ் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உதவித் தொகை, திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 12 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கமாகவும், மீதத் தொகை தேசிய சான்றிதழ் பத்திரமாகவும் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ஒரு கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பேஸ்புக் கொஸ்டீன்ஸ்

ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பலர் பதிலளிக்கும் வகையில் அமையப்பெற்ற புதிய பகுதியை சோதனை முறையில் பேஸ்புக் இணையதளம் துவக்கியுள்ளது. ஆரம்பித்த சிறிது காலத்திலேயே அசுர வளர்ச்சி் பெற்றுள்ள சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளமான பேஸ்புக் இணையதளம், புதிய பகுதி ஒன்றை சோதனை முறையில் துவக்கியுள்ளது. பேஸ்புக் கொஸ்டீன்ஸ் என்ற முறையில் துவக்கப்பட்டுள்ள இந்த புதிய பகுதிக்கு 'டேப் இன்டூ தே கலெக்டிவ் நாலெட்ஜ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பேஸ்புக் இணையதள புராடக்ட் மேனேஜ்மெண்டிற்கான இயக்குனர் பிளேக் ராஸ் கூறுகையில், இதன்மூலம், ஒரு கேள்விக்கு, பலவிதமான பதிலை பேஸ்புக் பயனாளர்கள் பெற முடியும் என்றும், தற்போது, இந்த சேவை சோதனைமுறையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், விரைவில் இது விரிவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

டிஎன்பிஎல் நிறுவனத்தின் நிகரலாபம் உயர்வு

தமிழ்நாடு செய்தித்தாள்நிறுவனத்தின் லாபம் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் 290.11 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டின் வருமானம் 178.79 கோடி ரூபாய். இந்த காலாண்டில் வரிக்கு முன்லாபம் 55.18 கோடி ரூபாய்.கடந்த ஆண்டு முதல் காலாண்டின் வரிக்கு முன்லாபம் 10.88 கோடி ரூபாய்.இந்த காலாண்டில் வரிக்கு பின் லாபம் 39.87 கோடி ரூபாய். கடந்த ஆண்டு முதல் காலாண்டின் லாபம் 7.14 கோடி. எனவே,கடந்த ஆண்டு முதல் காலாண்டின் லாபத்தை விட 4.58 மடங்கு லாபம் உயர்ந்துள்ளது.இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 64 ஆயிரத்து 537 டன் காகிதம் உற்பத்தி செய்துள்ளது.நடப்பு ஆண்டில், இந்நிறுவனம் மூன்று புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக, செய்தித்தாள் காகித நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் யுனைடெட் வங்கியுடன் கைகோர்ப்பு

இந்தியாவில் கார்களின் விற்பனையை அதிகரிக்க, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவுடன் கைகோர்க்க ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவன கார்களை வாங்குவதற்கான நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தங்கள் இந்நிறுவனமும், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதாகவும், இதனையடுத்து தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு, இனி யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா கார் வாங்குவற்தகாக நிதியுதவி வழங்கும், இதன்மூலம் தங்கள் நிறுவன கார்கள் இந்தியாவில் பலதரப்பு மக்களை விரைவில் சென்றடையும் என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துமில்லை என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Thursday, July 29, 2010

வர்த்தகம்

இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.

காலை 9.04 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.40 புள்ளிகள் குறைந்து 17942.97 ஆக வர்த்தகமாகியிருந்தது .

 தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 5.00 புள்ளிகள் குறைந்து 5392.55 ஆக வர்த்தகமாகியிருந்தது.

நிதிச்சுமையில் சிக்கி தவிக்கும் 'தங்கரத' ரயில்

தென்னிந்திய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கரத சொகுசு ரயில் நிதிச்சுமையில் சிக்கியுள்ளதால், தொடர்ந்து இயக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. தென்னிந்திய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், 2007ம் ஆண்டு தங்கரத சொகுசு ரயில் (கோல்டன் சேரியாட்) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயிலில் ஆடம்பர வசதிகளுடன் கூடிய 11 பெட்டிகள் இணைக்கப்பட்டன. இவற்றில் 44 தனித்தனி அறைகள் உள்ளன. இதில் 82 பயணிகள் பயணம் செய்யலாம். இதில் பயணம் செய்ய ஒரு நாள் கட்டணமாக லட்சத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக தங்கரத ரயில் திட்ட இயக்குனர் சீனிவாஸ் கூறியதாவது: பல்வேறு காரணங்களால் தங்கரத ரயிலை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தங்கரத ரயிலில் பயணம் செய்ய கட்டணம் அதிகமென்பதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. மேலும் உலக பொருளாதார சரிவு எதிரொலியால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இந்த ரயில் ஏற்கனவே இரண்டு முறை மட்டுமே முழு கொள்ளவுடன் பயணம் செய்துள்ளது. ஏற்கனவே தங்கரத ரயில் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ரயிலை ஒரு தடவை இயக்குவதற்கு 18.5 லட்ச ரூபாயை ரயில்வே துறை கட்டணமாக வசூலித்து வந்தது. இந்நிலையில் கட்டணத்தை ரயில்வே துறை திடீரென 40 லட்ச ரூபாயாக உயர்த்தி விட்டது. ஏற்கனவே போதிய வருவாய் இல்லாமல் நஷ்டத்தில் இயங்கி வரும் வேளையில் ரயில்வே துறை கட்டணத்தை உயர்த்தியுள்ளது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தங்கரத ரயிலை தொடர்ந்து இயக்கும் வகையில் ரயில்வே துறை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள், முதலமைச்சர் மற்றும் மாநில சுற்றுலா துறை அமைச்சர் ஆகியோரை வலியுறுத்தியுள்ளனர். இந்த பிரச்னைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்குமென நம்புகிறோம். மேலும் கட்டணத்தை குறைக்கவும், பயண கட்டணத்தை நிர்ணயிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம். 2009ம் ஆண்டில் உலக பொருளாதார சரிவு மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற காரணங்களால் தங்கரத ரயில் பெரும் நஷ்டத்தை எதிர் கொண்டது. மேலும் கட்டணத்தை ரயில்வே துறை உயர்த்தியதும், இத்திட்டத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இவ்வாறு சீனிவாஸ் கூறினார்.