தென்னிந்திய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கரத சொகுசு ரயில் நிதிச்சுமையில் சிக்கியுள்ளதால், தொடர்ந்து இயக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. தென்னிந்திய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், 2007ம் ஆண்டு தங்கரத சொகுசு ரயில் (கோல்டன் சேரியாட்) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயிலில் ஆடம்பர வசதிகளுடன் கூடிய 11 பெட்டிகள் இணைக்கப்பட்டன. இவற்றில் 44 தனித்தனி அறைகள் உள்ளன. இதில் 82 பயணிகள் பயணம் செய்யலாம். இதில் பயணம் செய்ய ஒரு நாள் கட்டணமாக லட்சத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக தங்கரத ரயில் திட்ட இயக்குனர் சீனிவாஸ் கூறியதாவது: பல்வேறு காரணங்களால் தங்கரத ரயிலை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தங்கரத ரயிலில் பயணம் செய்ய கட்டணம் அதிகமென்பதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. மேலும் உலக பொருளாதார சரிவு எதிரொலியால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இந்த ரயில் ஏற்கனவே இரண்டு முறை மட்டுமே முழு கொள்ளவுடன் பயணம் செய்துள்ளது. ஏற்கனவே தங்கரத ரயில் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ரயிலை ஒரு தடவை இயக்குவதற்கு 18.5 லட்ச ரூபாயை ரயில்வே துறை கட்டணமாக வசூலித்து வந்தது. இந்நிலையில் கட்டணத்தை ரயில்வே துறை திடீரென 40 லட்ச ரூபாயாக உயர்த்தி விட்டது. ஏற்கனவே போதிய வருவாய் இல்லாமல் நஷ்டத்தில் இயங்கி வரும் வேளையில் ரயில்வே துறை கட்டணத்தை உயர்த்தியுள்ளது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தங்கரத ரயிலை தொடர்ந்து இயக்கும் வகையில் ரயில்வே துறை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள், முதலமைச்சர் மற்றும் மாநில சுற்றுலா துறை அமைச்சர் ஆகியோரை வலியுறுத்தியுள்ளனர். இந்த பிரச்னைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்குமென நம்புகிறோம். மேலும் கட்டணத்தை குறைக்கவும், பயண கட்டணத்தை நிர்ணயிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம். 2009ம் ஆண்டில் உலக பொருளாதார சரிவு மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற காரணங்களால் தங்கரத ரயில் பெரும் நஷ்டத்தை எதிர் கொண்டது. மேலும் கட்டணத்தை ரயில்வே துறை உயர்த்தியதும், இத்திட்டத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இவ்வாறு சீனிவாஸ் கூறினார்.
No comments:
Post a Comment