Wednesday, August 4, 2010

பசப்பும் "பிளாக்பெர்ரி"

''பிளாக்பெர்ரி மொபைல்போன்களில் பரிமாறப்படும் தகவல்களை இந்திய அரசு கண்காணிக்கும் வகையில், சர்வரை மாற்றி அமைக்குமாறு கேட்டிருந்த அந்நாட்டு கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை,'' என, 'ரிம்' நிறுவனம் கூறி விட்டது. இந்த பசப்பு பதிலால், இந்திய அரசு கடும் அதிருப்தியடைந்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அவ்வப்போது அச்சுறுத்தல் எழுவதால், மொபைல் போன்கள் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் அனைத்தையும், இந்திய அரசு கண்காணித்து வருகிறது. கனடா நாட்டிலுள்ள, 'ரிம்' நிறுவனத்தின் தயாரிப்பான 'பிளாக்பெர்ரி' மொபைல்போனை, லட்சக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். 'பிளாக்பெர்ரி' மொபைல் மூலம் பரிமாறப்படும் தகவல்களை இடைமறித்து கேட்கும் வசதி இந்தியாவிடம் இல்லை. இந்த போனுக்கான சர்வர் கனடாவில் உள்ளதால், இதன் பிரத்யேக குறியீடுகளை கண்காணிக்க, அந்த சர்வரில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் அல்லது இந்தியாவில் ஒரு சர்வர் நிர்மாணிக்க வேண்டுமென, மத்திய உள்துறை அமைச்சகம், 'ரிம்' நிறுவனத்திடம் கேட்டிருந்தது. முதலில் தயங்கிய இந்நிறுவனம், 'அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் தனியாக சர்வர் அமைத்துள்ளீர்கள். எங்களுக்கு கண்காணிப்பு வசதி ஏற்படுத்தி தரவில்லையெனில், இந்தியாவில் 'பிளாக்பெர்ரி' மொபைல் போன்களில் செயல்பாடுகளை முடக்கி விடுவோம்' என, இந்தியா எச்சரித்ததை அடுத்து, வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி கூறியது. ஆனால் நேற்று, தன் நிலையிலிருந்து 'ரிம்' நிறுவனம் பின் வாங்கி விட்டது.

அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கோரிக்கையை எங்களால் நிறைவேற்ற இயலவில்லை. 'பிளாக்பெர்ரி' மொபைல் போன்களில் பரிமாறப்படும் தகவல்களை, கண்காணிப்பு ஏஜன்சிகள் மட்டுமல்ல; எங்களால் கூட படிக்க முடியாது. வாடிக்கையாளர்களின் வசதிக்காகவே இது போன்ற பாதுகாப்பு வடிவமைப்பை, மொபைல்போன்களில் ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'ரிம்'மின் இந்த அறிக்கையால், இந்திய அரசு கடும் அதிருப்தியடைந்துள்ளது. ஏனெனில் இந்தியாவில், 10 லட்சம் 'பிளாக்பெர்ரி' மொபைல் உள்ளதென்பதால், அரசுக்கு கூடுதல் பிரச்னை எழுந்திருக்கிறது.

கெரசின் லிட்டருக்கு ரூ.11.50

தமிழகத்தில் ரேஷனில் வழங்கப்படும் கெரசின் விலை அதிரடியாக லிட்டருக்கு, மூன்று ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. லிட்டர் 11.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. விலை உயர்வு, ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

 
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் கெரசின் வழங்கப்படுகிறது. சிலிண்டர் அல்லாத குடும்ப அட்டைகளுக்கு 10 லிட்டரும், ஒரு சிலிண்டர் அட்டைகளுக்கு மூன்று லிட்டரும், விடுபட்டு, புதிதாக வழங்கப்பட்ட அட்டைகளுக்கு மூன்று லிட்டர் என கெரசின் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வரை சென்னையில் ஒரு லிட்டர் 8.40 ரூபாயாகவும், பிற மாவட்டங்களில் தூரத்தின் தன்மைக்கேற்ப ஒன்பது ரூபாய் வரையும் விற்பனையானது. தற்போது கெரசின் விலை திடீரென லிட்டருக்கு மூன்று ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் 11.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு ஆக., 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

 
உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, 'மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியதால், கெரசின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் லிட்டர் 11.50 ரூபாயாகவும், பிற மாவட்டங்களில் தூரத்தின் தன்மைக்கேற்ப 12 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது' என்றனர்.





Friday, July 30, 2010

பிராவிட‌ன்ட் நிதி திட்ட‌த்தில் புதிதாக இ-பேமெண்ட் முறை

தேசிய மின் பண பரிவர்த்தனை மற்றும் வங்கி ஒருங்கிணைப்பு கோர் பேங்கிங் மூலம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம் , தனது பயனாளிகளுக்கு இ - பேமெண்ட் முறையில் பணம் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் இரண்டொரு நாட்களில் வங்கி கணக்குகளில் பயனாளிகள் பணம் பெறலாம். இது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, இந்த திட்டத்திற்கு பயனாளிகள் தங்களது வங்கி கணக்கு புத்தக்தின் முதல் பக்க நகலில், கையெழுத்துடன் சுய உறுதி அளிக்க வேண்டும் அல்லது க்ளைம் மனுவுடன் ஒருப்பிழப்பு செய்யப்பட்ட காசோலையின் நகலையும் வழங்கலாம். இதனால் பணம் உடனடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும் உறுப்பினர்கள் தங்களது மொபைல் போன் நம்பரையும் தெரிவிக்கவேண்டும். இதனால் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கும் தகவல்களை பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.



மாற்றுத் திறனாளிகள் திருமண தம்பதியருக்கு 25ஆயிரம் நிதியுத‌வி

மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். வருமான உச்ச வரம்பும் நீக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்யும் இயல்பான நிலையில் உள்ளவர்களை ஊக்குவிக்க, திருமண நிதியுதவித் திட்டம் 1986ல் துவக்கப்பட்டது. ஒரு மாற்றுத் திறனாளியை மற்றொரு மாற்றுத் திறனாளி திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை, 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த உள்ளதாக, முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, வருமான உச்ச வரம்புத் திட்டத்தின் கீழ் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உதவித் தொகை, திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 12 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கமாகவும், மீதத் தொகை தேசிய சான்றிதழ் பத்திரமாகவும் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ஒரு கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பேஸ்புக் கொஸ்டீன்ஸ்

ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பலர் பதிலளிக்கும் வகையில் அமையப்பெற்ற புதிய பகுதியை சோதனை முறையில் பேஸ்புக் இணையதளம் துவக்கியுள்ளது. ஆரம்பித்த சிறிது காலத்திலேயே அசுர வளர்ச்சி் பெற்றுள்ள சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளமான பேஸ்புக் இணையதளம், புதிய பகுதி ஒன்றை சோதனை முறையில் துவக்கியுள்ளது. பேஸ்புக் கொஸ்டீன்ஸ் என்ற முறையில் துவக்கப்பட்டுள்ள இந்த புதிய பகுதிக்கு 'டேப் இன்டூ தே கலெக்டிவ் நாலெட்ஜ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பேஸ்புக் இணையதள புராடக்ட் மேனேஜ்மெண்டிற்கான இயக்குனர் பிளேக் ராஸ் கூறுகையில், இதன்மூலம், ஒரு கேள்விக்கு, பலவிதமான பதிலை பேஸ்புக் பயனாளர்கள் பெற முடியும் என்றும், தற்போது, இந்த சேவை சோதனைமுறையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், விரைவில் இது விரிவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

டிஎன்பிஎல் நிறுவனத்தின் நிகரலாபம் உயர்வு

தமிழ்நாடு செய்தித்தாள்நிறுவனத்தின் லாபம் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் 290.11 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டின் வருமானம் 178.79 கோடி ரூபாய். இந்த காலாண்டில் வரிக்கு முன்லாபம் 55.18 கோடி ரூபாய்.கடந்த ஆண்டு முதல் காலாண்டின் வரிக்கு முன்லாபம் 10.88 கோடி ரூபாய்.இந்த காலாண்டில் வரிக்கு பின் லாபம் 39.87 கோடி ரூபாய். கடந்த ஆண்டு முதல் காலாண்டின் லாபம் 7.14 கோடி. எனவே,கடந்த ஆண்டு முதல் காலாண்டின் லாபத்தை விட 4.58 மடங்கு லாபம் உயர்ந்துள்ளது.இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 64 ஆயிரத்து 537 டன் காகிதம் உற்பத்தி செய்துள்ளது.நடப்பு ஆண்டில், இந்நிறுவனம் மூன்று புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக, செய்தித்தாள் காகித நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் யுனைடெட் வங்கியுடன் கைகோர்ப்பு

இந்தியாவில் கார்களின் விற்பனையை அதிகரிக்க, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவுடன் கைகோர்க்க ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவன கார்களை வாங்குவதற்கான நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தங்கள் இந்நிறுவனமும், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதாகவும், இதனையடுத்து தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு, இனி யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா கார் வாங்குவற்தகாக நிதியுதவி வழங்கும், இதன்மூலம் தங்கள் நிறுவன கார்கள் இந்தியாவில் பலதரப்பு மக்களை விரைவில் சென்றடையும் என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துமில்லை என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.