அடுத்த மூன்று ஆண்டுகளில், நம் நாட்டில் சூரிய சக்தி மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். இதில் 500 மெகா வாட் சூரிய வெப்பத்தின் வாயிலாகவும், மற்றொரு 500 மெகா வாட் சூரிய ஒளி வாயிலாகவும் பெறப்படும் என அவர் கூறினார். மத்திய அரசுக்கு சொந்தமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் மின் உற்பத்தி திட்டங்களுக்கு தேவையான நிதி உதவி வழங்கி வருகின்றன. ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் கிராமப்புறங்களில் அமைக்கப்படும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு கடன் வசதி அளித்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் 2013-ஆம் ஆண்டுக்குள் 1,000 மெகா வாட் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Tuesday, July 27, 2010
பருப்பு விலை சரிவு
உணவுப் பொருட்களை, 'ஸ்டாக்' வைத்துள்ள வியாபாரிகள் மீது, அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரவிய தகவலால், பருப்பு விலை சரிந்துள்ளது. பருப்பு விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு, நீக்கியது. இருந்தும், வடமாநிலங்களில் வெள்ளம் காரணமாக, விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
நவம்பர் 2009லிருந்து கடந்த வாரம் வரை, அனைத்து பருப்பு வகையிலும் நிலையில்லா தன்மையே நீடித்தது. இதனால், பெரிய வியாபாரிகளை தவிர, நடுத்தர மற்றும் சிறிய மளிகை கடை வியாபாரிகள், விற்பனைக்கு ஏற்ப பருப்பு வகைகளை கொள்முதல் செய்தனர். எதிர்க்கட்சிகளின் போராட்டம் மற்றும் தமிழகத்தில் வர இருக்கும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வடமாநிலம், தமிழகத்தில் அனைத்து வகையான பருப்புகளையும் இருப்பு வைத்துள்ள வியாபாரிகளை கண்காணிக்க உளவுத் துறைக்கு, மத்திய, மாநில அரசுகள், ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளன. இத்தகவல் வியாபாரிகள் மத்தியில் பரவி, இருப்பு வைத்துள்ள பருப்பு வகைகளை விற்பனைக்கு அனுப்ப துவங்கி விட்டனர். வடமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு பருப்பு வரத்து, திடீர் என அதிகரித்துள்ளதால், விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம், துவரம் பருப்பு மொத்த விலையில் குவிண்டால் 7,600 ரூபாய்க்கு விற்றது, நேற்று 6,950 ரூபாய்க்கும், 9,800 ரூபாய்க்கு விற்ற பாசி பருப்பு, 8,400 ரூபாய்க்கும் விற்கிறது. மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். துவரம் பருப்பு, பாசி பருப்பின் விலை சரிவடைந்த நிலையில், உளுந்தம் பருப்பின் விலையில் மாற்றமில்லை. இச்சரிவு மேலும் தொடரும் என்பதால், வியாபாரிகள் மத்தியில் கடும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
Wednesday, July 21, 2010
உலகின் முதல் பெராரி தீம் பார்க்
உலகின் முதல் பெராரி தீம் பார்க் துபாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துபாய் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : துபாய் நாட்டில் முதல்முறையாக பார்முலா ஒன் கார் போட்டிகள் நடைபெற்றன. அப்போது. அந்த போட்டிகளுக்கு, உலக மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததாகவும், அதனை கவுரவப்படுத்தும் பொருட்டு, பெராரி உலகம் துபாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பெராரி உலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெராரி தீம் பார்க், சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிடும் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. இந்த தீம் பார்க 100 நாட்கள் திறந்திருக்கும் என்றும், இந்த தீம் பார்க்கில், உலகின் அதிவேக ரோலர் கோஸடர் நிறுவப்பட்டு உள்ளதாகவும், பெராரி பார்முலா ஒன் காரில் பயணம் செய்த உணர்வு, இந்த ரோலர் கோஸ்டரில் பயணிக்கும்போது ஏற்படும் என்றும் துபாயின் முக்கிய சுற்றுலாத் தலமான யாஸ் மரினா சர்க்யூட்டில், கடந்த நவம்பர் 2009 காலம் வரை பார்வையிட்ட மக்களின் எண்ணிக்கையை, இந்த தீம்பார்க் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை மிஞ்சி விட்டதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, July 20, 2010
கச்சா எண்ணெய் விலை உயர்வு
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 77 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் செப்டம்பர் டெலிவரிக்கான விலை 5 சென்டுகள் அதிகரித்து 77.63 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9 சென்டுகள் அதிகரித்து 76.31 அமெரிக்க டாலராக இருந்தது.
சச்சினின் 'ரத்த சரித்திரம்'
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது 'டெண்டுல்கர் ஓபஸ்' என்ற அவரது சுயசரிதை புத்தகம். சர்வசேத கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்து சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரஹான் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. 'டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட உள்ளது. தனிச்சிறப்பு: கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருப்பது தான் இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு. காகிதக் கூழில், அவரது ரத்தம் தோய்த்து வெளிவர உள்ளது. மொத்தம் 852 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 37 கி.கி., எடை கொண்டது. இதன் விலை 37 லட்சம் ரூபாய். மொத்தம் 10 பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்
பதிவும் முடிந்து விட்டது. ரத்தத்தின் ரத்தங்கள்: சச்சினின் ரத்தத்தின் ரத்தங்களாக கருதப்படும் ஏழை ரசிகர்களால் இப்புத்தகத்தை வாங்க முடியாது. இருப்பினும் 1 லட்சம் மற்றம் 1.50 லட்சம் ரூபாய்களிலும் இப்புத்தகம் வெளியிடப் பட்டுள்ளது. ஆனால் இவற்றில் சச்சினின் ரத்தம் இடம் பெறாது. கையெழுத்து மட்டுமே இடம் பெறும். இது தவிர, 10 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய்களிலும் இப்புத்தகத்தை வெளியிட கிரஹான் மீடியா ஏற்பாடு செய்து வருகிறது. அவரது டி.என்.ஏ., பற்றி தகவல்களும் இதில் இடம் பெற உள்ளன. இதற்காக அவரது உமிழ்நீர் கேட்கப்பட்டு உள்ளது. புதுமை: இது குறித்து கிரஹான் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் போவ்லர் கூறுகையில்,'' கிரிக்கெட் அரங்கின் கடவுளாக வர்ணிக்கப்படுகிறார் சச்சின். இதனால் 'டெண்டுல்கர் ஓபஸ்' புத்தகத்தில் புதுமை செய்ய நினைத்தோம். அவரது ரத்தம் தோய்ந்த பக்கம் இடம் பெறுவதால், இப்புத்தகம் தனிச்சிறப்பை பெறுகிறது. உலககோப்பை தொடரை ஒட்டி இப்புத்தகத்தை வெளியிட திட்டமிட்டுள் ளோம்,'' என்றார்.
இதற்கு முன்... : கிரிக்கெட் கடவுள் சச்சினின் சுயசரிதை புத்தகம் 37 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் இதற்கு முன் மைக்கேல் ஏஞ்சலோ என்ற புத்தகம் 49 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ள வரலாறு உள்ளது. கலைத்திறனை வெளிப்படுத்தும் இப்புத்தகம் கைகளினால் தயாரிக்கப்பட்டது. 30 கிலோ எடை கொண்டது. மொத்தம் 33 பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்ட இப்புத்தகம் மார்பிள் மற்றும் வெல்வெட் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது. நியூயார்க் பொது நூலகத்தில் இது இடம் பெற்றுள்ளது. இதனை குரூப்போ எப்.எம்.ஆர்., நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர்.
Monday, July 19, 2010
தங்கம் விலை உயர்வு
தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1709 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.18380 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.31.55 க்கும், பார் வெள்ளி ரூ.29510 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பங்குச்சந்தை நிலவரம்
மும்பை பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது சரிவுடனேயே முடிந்தது. காலை 9.17 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42.17 புள்ளிகள் குறைந்து 17913.65 ஆக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.75 புள்ளிகள் குறைந்து 5379.15 ஆக வர்த்தகமாகியிருந்தது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27.40 புள்ளிகள் குறைந்து 17928.42 ஆக வர்த்தகமாகியிருந்தது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 7.45 புள்ளிகள் குறைந்து 5386.45 ஆக வர்த்தகமாகியிருந்தது.
Subscribe to:
Comments (Atom)