உணவுப் பொருட்களை, 'ஸ்டாக்' வைத்துள்ள வியாபாரிகள் மீது, அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரவிய தகவலால், பருப்பு விலை சரிந்துள்ளது. பருப்பு விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு, நீக்கியது. இருந்தும், வடமாநிலங்களில் வெள்ளம் காரணமாக, விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
நவம்பர் 2009லிருந்து கடந்த வாரம் வரை, அனைத்து பருப்பு வகையிலும் நிலையில்லா தன்மையே நீடித்தது. இதனால், பெரிய வியாபாரிகளை தவிர, நடுத்தர மற்றும் சிறிய மளிகை கடை வியாபாரிகள், விற்பனைக்கு ஏற்ப பருப்பு வகைகளை கொள்முதல் செய்தனர். எதிர்க்கட்சிகளின் போராட்டம் மற்றும் தமிழகத்தில் வர இருக்கும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வடமாநிலம், தமிழகத்தில் அனைத்து வகையான பருப்புகளையும் இருப்பு வைத்துள்ள வியாபாரிகளை கண்காணிக்க உளவுத் துறைக்கு, மத்திய, மாநில அரசுகள், ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளன. இத்தகவல் வியாபாரிகள் மத்தியில் பரவி, இருப்பு வைத்துள்ள பருப்பு வகைகளை விற்பனைக்கு அனுப்ப துவங்கி விட்டனர். வடமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு பருப்பு வரத்து, திடீர் என அதிகரித்துள்ளதால், விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம், துவரம் பருப்பு மொத்த விலையில் குவிண்டால் 7,600 ரூபாய்க்கு விற்றது, நேற்று 6,950 ரூபாய்க்கும், 9,800 ரூபாய்க்கு விற்ற பாசி பருப்பு, 8,400 ரூபாய்க்கும் விற்கிறது. மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். துவரம் பருப்பு, பாசி பருப்பின் விலை சரிவடைந்த நிலையில், உளுந்தம் பருப்பின் விலையில் மாற்றமில்லை. இச்சரிவு மேலும் தொடரும் என்பதால், வியாபாரிகள் மத்தியில் கடும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment