Saturday, July 17, 2010

கல்விக்காக ரூ.2.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

'இந்தியாவில் கல்விக்காக 2.25 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது,' என மத்திய மனித வளத்துறை மேம்பாட்டு இணை அமைச்சர் புரந்தேஸ்வரி தெரிவித்தார்.விருதுநகரில் நடந்த காமராஜர் பிறந்த தின விழாவை முன்னிட்டு விருதுநகர், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2ல் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருது வழங்கும் விழா நடந்தது. மாவட்ட காங்கிரஸ் அணி தலைவர் கணேசன், மாணவரணி டி.ஏ.நவீன், மாணிக்க தாகூர் எம்.பி., உட்பட காங்., கட்சி நிர்வாகிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி பேசியதாவது: கமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 15303 பள்ளிகளை 30000 பள்ளிகளாக மாற்றினார். பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்கள் சதத்தை 80 சதமாக உயர்த்தினார். கல்வி என்பது வகுப்பறையும், புத்தகமும், மதிப்பெண்ணும்தான் என்ற நிலை இன்று உள்ளது.மத்திய அரசு இந்தாண்டு கல்விக்காக 2.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 1.25 லட்சம் கோடி ஆரம்பக்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாணிக்க தாகூர் எம்.பி., தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் விருதுநகரில் 16 அல்லது 17ம் தேதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்கப்படுகிறது. இந்த பகுதியில் விரைவில் பாலிடெக்னிக் துவக்கப்படும், என்றார். பின்னர் 1,300 மாணவ, மாணவிகள், 167 ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment