பெட்ரோல், டீசல் விலையை முன்பு மத்திய பெட்ரோலிய அமைச்சகமே நிர்ணயம் செய்து வந்தது. இதன் காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்ளுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பு கடந்த மாதம் மிக அதிக அளவுக்கு சென்றது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவை, இது தொடர்பாக கூடி விவாதித்தது. அப்போது பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக உயர்ந்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மாறுவதற்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைக்க எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த விலை மாற்றத்தை எத்தகைய கால இடைவெளியில் செய்வது என்பதில் இந்திய எண்ணை நிறுவனங்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும், பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கலாம் என்று யோசனை கூறின. இதை இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்கவில்லை. இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை விலை நிர்ணயம் செய்தால், அது பதுக்கலுக்கு வழி வகுத்து விடும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா எண்ணை நிறுவன பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்தினார். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. அதன்படி மாதத்துக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை மாற்றி அமைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் படி வரும் 25 அல்லது 26-ந் தேதி பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணை விலை சற்று குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையை அதற்கு ஏற்ப சற்று குறைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அந்த வகையில் பெட்ரோல் விலை விரைவில் லிட்டருக்கு 20 பைசா குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத்பெட்ரோலியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மூன்றும் இந்த விலை குறைப்பை ஒரே மாதிரி நடைமுறைப்படுத்தும். தனியார் எண்ணை நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்களும் அரசு எண்ணை நிறுவனங்களை பின்பற்றி விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment