Saturday, July 17, 2010

இந்தியாவுடன் ஈரான் முதலீடு பாதுகாப்பு ஒப்பந்தம்

இந்தியா, ஈரான் இடையே தற்போதுள்ள இரு தரப்பு வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இரு தரப்பு முதலீட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாக ஈரான் அமைச்சர் கூறியுள்ளார். புது டெல்லியில் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கி ஏற்பாடு செய்த ‘ஈரானில் முதலீட்டு வாய்ப்புகள்’ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஈரான் நாட்டு நிதியமைச்சர் முனைவர் செய்யது சம்சுதீன் உசேனி, இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்வது தொடர்பாக இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் தான் பேசப்போவதாகக் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம் கடந்த மூன்று ஆண்டுகளில் 60 விழுக்காடு அதிகரித்து 15 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்ந்துள்ளது, அதனை அடுத்த 5 ஆண்டுகளில் 30 பில்லியன் டாலர்களாக உயர்த்த முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் அவசியம் என்று கூறியுள்ளார். இந்தியாவின் எரிசக்தித் தேவைகளை நிறைவு செய்ய ஈரான் தயாராக உள்ளது என்று கூறிய உசேனி, எண்ணெய், எரிவாயு, சுரங்கம், கனிமங்கள், வாகன உற்பத்தி, போக்குவரத்து, இராசாயணம், மருந்து உற்பத்தி, ஜவுளி, விவசாயம், உணவுப் பதனிடல் ஆகியவற்றில் இந்தியாவின் முதலீட்டை ஈரான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment