Wednesday, August 4, 2010

இரண்டாவது முறையாக எண்ணெய் விலை கிடுகிடு

எண்ணெய் வித்துக்களின் தட்டுப்பாட்டால் விலையேற்றமடைந்த எண்ணெய் விலை, மின் கட்டண உயர்வு அமலான மறு நிமிடமே, இரண்டாவது முறையாக மேலும் உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஜல்லிக்கரை, ஆந்திராவின் கடப்பா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தமிழக எண்ணெய் ஆலைகளுக்கு நிலக்கடலை வந்து கொண்டிருந்தது. வரத்து தற்போது முற்றிலும் நின்று விட்டதோடு, நிலக்கடலையின் விலையிலும் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இவ்விலை உயர்வு, அப்படியே எண்ணெயில் எதிரொலித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துக்களின் விலை உயர்வால், எண்ணெய் விலை லிட்டருக்கு இரண்டு முதல்மூன்று ரூபாய் வரை உயர்ந்தது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து எண்ணெய் விலை,நேற்று முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை கடைசி வாரம், லிட்டர் 76 ரூபாய்க்கு விற்பனையான கடலை எண்ணெய், ஐந்து ரூபாய் அதிகரித்து 81 ரூபாயானது. நேற்று இதன் விலையில் மேலும்இரண்டு ரூபாய் அதிகரித்து, லிட்டர் 83 ரூபாய்க்கு விற்கிறது. 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட டின் 1,215 ரூபாய்க்கு விற்றது, 1,245 ரூபாய்க்கு விற்கிறது. ரீபைன்ட் கடலை எண்ணெய், கடந்த வாரம் நான்கு ரூபாய் அதிகரித்து 89 ரூபாய் விற்றது; நேற்று மேலும் இரண்டு ரூபாய் அதிகரித்து, 91 ரூபாய்க்கு விற்கிறது.

கடலை எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வை அடுத்து, சூரிய காந்தி எண்ணெயின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம், லிட்டர் 55 ரூபாய்க்கு விற்ற சூரியகாந்தி எண்ணெய், ஆறு ரூபாய் நேற்று உயர்ந்து, 61 ரூபாய்க்கு விற்கிறது. இதே போல் 15 லிட்டர் கொண்ட டின், 825 ரூபாய்க்கு விற்றது, 915 ரூபாய்க்கு விற்கிறது. கடந்த வாரம் வரை 43 ரூபாய்க்கு விற்ற பாமாயில், நேற்று 45 ரூபாயானது. ஆனால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

 
எண்ணெய் வியாபாரி கிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் எண்ணெய் வித்துக்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, கடந்த வாரம் கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் விலை உயர்ந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்த அடுத்த நிமிடமே எண்ணெய் ஆலைகள், தங்களின் தயாரிப்புகளுக்கான விலையை ஏற்றின. கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் விலை, இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை சீசன் துவங்க உள்ள நிலையில், எண்ணெய்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கிருஷ்ணன் கூறினார்.



No comments:

Post a Comment