இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எஸ்.சி.ஐ) நிறுவனம், நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது பங்கு வெளியீட்டில், இந்நிறு வனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 10 சதவீத பங்கு களுடன், புதிய பங்குகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு கப்பல்கள் சேவையில் ஈடுபட்டு வரும் எஸ்.சி.ஐ. நிறுவனத்தில், மத்திய அரசு தற்பொழுது 80.12 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இது தவிர, 10 சதவீதத்திற்கும் மேலான பங்குகள் எல்.ஐ.சி. நிறுவனத்திடமும், மீதமுள்ள 3.15 சதவீத பங்குகள் பொதுமக்கள் வசமும் உள்ளன. மத்திய அரசு, அதன் நிதி பற்றாக்குறையை குறைத்துக் கொள்ளும் வகையில், நடப்பு நிதி ஆண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.40,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இவ்வகையில், எஸ்.சி.ஐ. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் இரண்டாவது பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் எஸ்.சி.ஐ.யின் இரண்டாவது பங்கு வெளியீட்டிற்கு ஒப்புதல் வேண்டி, மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இந்த நிலையில், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனம் ரூ.191 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.120 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.883 கோடியிலிருந்து ரூ.907 கோடியாக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment