Thursday, July 29, 2010

"ரெயின்ட்ரீ" ரூ.200 கோடியில் புதிய ஹோட்டல்

சென்னையைச் சேர்ந்த சீப்ராஸ் குழுமம், ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் துறையில் ஈடுபட்டு வருகிறது. 1970-ஆம் ஆண்டு முதல் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்நிறுவனம், அண்ணாசாலையில், நந்தனத்தில் ரெயின்ட்ரீ என்ற அதன் இரண்டாவது ஹோட்டலை தொடங்கி உள்ளது. இந்நிறுவனத்தின் முதல் ரெயின்ட்ரீ ஹோட்டல் சென்னை செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ளது. இது குறித்து இக்குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சி.சுப்பாரெட்டி கூறும்போது, 'புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரெயின்ட்ரீ ஹோட்டல் ரூ.200 கோடி செலவில் (நிலம் வாங்கியது உள்பட) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் 230 அறைகள் உள்ளன. இது தவிர, சென்னை விமான நிலையத்திற்கு அருகாமையில், ரூ.200 கோடி திட்டச் செலவில், 200 அறைகளுடன் கூடிய மற்றொரு ஹோட்டலையும் உருவாக்கி வருகிறது. இந்த ஹோட்டல் திட்டத்திற்கு உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கி உள்ளன. டெல்லியில் உள்ள பாதுகாப்பு இயக்குனரகத்தின் ஒப்புதல் நிலுவையில் உள்ளது'' என்று தெரிவித்தார். சீபிராஸ் குழுமம், கடந்த 27 ஆண்டுகளில், 170 ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், 4.50 லட்சம் சதுர அடியில் திட்டப் பணிகள் கைவசம் உள்ளன. டைடல் பார்க் அருகாமையில் 3.50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் 350 குடியிருப்புகள் திட்டம் ஓராண்டிற்குள் நிறைவடையும் என இக்குழுமம் தெரிவித்துள்ளது. இக்குழுமத்திற்கு சென்னை ஒரகடத்தில் 60 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு ஒரு நகரியத்தையும், வில்லா வகை குடியிருப்புகளையும் அமைக்க திட்டமிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில், 40 ஏக்கரில் வர்த்த குடியிருப்பு திட்டம் ஒன்றையும் மேற்கொள்ள இருப்பதாக சுப்பாரெட்டி தெரிவித்தார். இக்குழுமத்தில் தற்போது 2,900 பேர் பணிபுரிகின்றனர். ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளின் வாயிலாக நடப்பு நிதி ஆண்டில், குழுமம் ரூ.350 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. இது, சென்ற நிதி ஆண்டில், ரூ.250 கோடியாக இருந்தது. செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள ரெயின்ட்ரீ ஹோட்டலில் 105 அறைகள் உள்ளன. தற்பொழுது இவற்றில் 70 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்கள் தங்கி வருகின்றனர். இந்த ஹோட்டல், சென்ற நிதி ஆண்டில் ரூ.35 கோடி வருவாய் ஈட்டி உள்ளது என அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment